மும்பை : உலக சுகாதார அமைப்பின் சேப்ஹாண்ட்ஸ்சேலஞ்சை ஊக்குவிக்கும்வகையில் அதை மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் செய்து காட்டியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
உலக அளவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் நிலையில், பல்வேறு அறிவுரைகளை உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வருகிறது. முக்கியமாக கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதன் அவசியம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பான கைகளுக்கான இந்த சேலஞ்ச் குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய கைகளை சோப் கொண்டு கழுவி, அதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
தன்னுடைய 20 ஆண்டுகளுக்கும் மேலான கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை புரிந்து கிரிக்கெட்டின் கடவுளாக போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். தன்னுடைய ஓய்விற்கு பின்பு பல்வேறு சமூக பணிகளை இவர் மேற்கொண்டு வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காட்டுத்தீ நன்கொடை போட்டியில் பயிற்சியாளராக பங்கேற்றார் சச்சின்
இதேபோல தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாடினார். இந்நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பின் சேப்ஹாண்ட்ஸ் சேலஞ்சை கையில் எடுத்துள்ளார் சச்சின். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கைகளின் சுத்தம் குறித்து அவர் ஹிந்தியில் பேசுகிறார்.
இந்த வீடியோவில் சோப்பை கொண்டு, தன்னுடைய கைகளை சுத்தமாக கழுவி சுத்தம் செய்யும் சச்சின் டெண்டுல்கர், கைகளை சுத்தமாக பராமரிப்பதன் அவசியம் குறித்து அதுவும் கொரோனா பரவும் இந்த நேரத்தில் அதன் அவசியம் குறித்தும் விளக்குகிறார்.
இந்நிலையில் இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாசும் இந்த சேலஞ்சை மேற்கொண்டு சச்சின், மேரிகோம், சானியா மிர்சா மற்றும் ராணி ராம்பால் ஆகியோருக்கும் அதை பார்வேர்டு செய்துள்ளார்.
முன்னதாக பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து, இந்த சேலஞ்சை எடுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தான் கைகளை கழுவும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.