200 வது டெஸ்டுடன் சச்சின் ஓய்வெடுக்க மாட்டாராம்... சில்வர் ஜூப்ளி கொண்டாடப் போறாராம்...!
மும்பை: கிரிக்கெட்டில் இருந்து எப்போ ஓய்வு பெறப்போகிறார் சச்சின் டெண்டுல்கர் என்பதுதான் இப்போது பரப்பான பேச்சாகி வருகிறது. ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
200 வது டெஸ்ட் உடன் தனது ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் கிரிக்கெட் வாழ்வில் அவர் தனது 25 ஆண்டுகாலத்தை நிறைவு செய்த பின்னரே ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
2014 ஆண்டு இறுதிவரை சச்சின் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுவதாகவும் இப்போது புதிதாக பேச்சு எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு 40 வயதாகிறது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வரும் சச்சின் இதுவரை 198 டெஸ்டில் விளையாடியுள்ளார். விரைவில் 200-வது டெஸ்டில் விளையாடும் ஆவலில் உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்
நவம்பர் மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2 டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் தெண்டுல்கர் 200-வது டெஸ்டில் விளையாடி புதிய வரலாற்று சாதனை படைப்பார் என்று கூறப்படுகிறது.

200 வது டெஸ்டு போட்டி
200-வது டெஸ்ட் போட்டியோடு தெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. கிரிக்கெட் வாரியமும் இது தொடர்பாக அவரிடம் அறிவுறுத்த இருக்கிறது என ஊடகங்களில் செய்தி வெளியாகின.

25 வது ஆண்டு
ஆனால் சச்சினைப் பொறுத்தவரை 200 டெஸ்ட் போட்டியோட ஓய்வு பெற விரும்பவில்லையாம். சர்வதேச போட்டிகளில் 25-வது ஆண்டை நிறைவு செய்யும் ஆர்வத்தில் உள்ளார்.

பாகிஸ்தானில் துவக்கம்
40 வயதான தெண்டுல்கர் 1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் அறிமுகம் ஆனார். 24 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். 2014ம் ஆண்டு வரை அதாவது சர்வதேச போட்டியில் 25 ஆண்டுகள் விளையாடி விட்டு ஓய்வு பெறலாம் என்று சச்சின் விரும்புவதாக கூறப்படுகிறது.

நியூசிலாந்து பயணம்
இந்திய அணி 2014ம் ஆண்டு ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடரில் விளையாடுவதன் மூலம் தனது 25-வது ஆண்டை நிறைவு செய்ய தெண்டுல்கர் விரும்புகிறார்.

கிரிக்கெட் வாரியம்
அதேசமயம் சச்சின் ஓய்வு பெறவேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் வற்புறுத்தாது என்று வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார். அதேபோல் எந்த ஒரு வீரரையும் ஓய்வு பெறுமாறு கிரிக்கெட் வாரியம் கட்டாயப் படுத்தவில்லை என்று துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவும் விளக்கம் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications