மும்பை : மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் விளையாட்டு வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேஷ் பூபதி தங்கள் வாக்கை செலுத்தினர்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

ஹரியானாவின் 80 சட்டசபை தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவின் 288 சட்டசபை தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த இரண்டு மாநில தேர்தலுடன் சேர்த்து தமிழ்நாடு, கேரளாவில் இடைடேர்தலும் நடந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாலிவுட் பிரபலங்கள், பிரபல விளையாட்டு வீரர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.
காலை 9 மணி அளவில் பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, தன் மனைவி லாரா தத்தாவுடன் வந்து வாக்களித்தார். அவர்கள் மேற்கு பாந்த்ராவில் இருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
அதே மேற்கு பாந்த்ராவில், மற்றொரு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன் மனைவி அஞ்சலி, மகன் அர்ஜுனுடன் வந்து வாக்களித்தார். சச்சினுடன் வாக்குச்சாவடி ஊழியர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டது லேசாக சர்ச்சை ஆனது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய அணி தேர்வுக் குழு தலைவர் சந்தீப் பாட்டில் மத்திய மும்பை பகுதியில் இருக்கும் சிவாஜி பார்க் வாக்குச்சாவடியில் தன் வாக்கினை செலுத்தினார். முன்னாள் கிரிக்கெட் வீரர் திலிப் வெங்சர்க்கார் மும்பையின் வொர்லி ஏரியாவில் வாக்களித்தார்.
மகாராஷ்டிராவில் மிகவும் மந்தமாக வாக்குப் பதிவு நடந்து வருகிறது. 11 மணி அளவில் வெறும் 17 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு நடந்துள்ளது.