30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவில் கடந்த வாரங்களில் நிலவிவரும் காட்டுத்தீயில் 32 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 2,700 வீடுகள் சேதமடைந்துள்ளன. 12 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் உள்ள காடுகள் தீக்கிரையாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் காட்டுத்தீ ஏற்படுவது சகஜம் என்றாலும், இதுவரை இல்லாத வகையில் தற்போது நிலவிவரும் இந்த காட்டுத்தீ அதிகளவிலான சேதங்களை உண்டு பண்ணியுள்ளது.
நன்கொடை விளையாட்டு போட்டிகள்
இந்நிலையில் இந்த காட்டுத்தீக்கு உலக அளவில் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் விராங்கனைகள் ஆகியோர் தங்களது நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். மேலும் தாங்கள் உபயோகித்த பொருட்களை ஏலம்விட்டு அந்த தொகையையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். மேலும் நன்கொடை வழங்கும்வகையில் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் போட்டிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
மெல்போர்னில் நடைபெறுகிறது
வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னின் ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நன்கொடை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. முன்னதாக சிட்னியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்தப் போட்டி வானிலை காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு தற்போது, மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இதில் ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் மோதவுள்ளனர்.
கில்கிறிஸ்ட் அணிக்கு டிம் பெயின் பயிற்சி
இந்தப் போட்டியில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளராக சச்சின் டெண்டுல்கர் பொறுப்பேற்றுள்ளார். இதேபோல ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான எதிரணிக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் பயிற்சி கொடுக்கவுள்ளார். முன்னதாக இந்த அணிக்கு ஷேன் வார்ன் கேப்டனாக இருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலகியுள்ளார்.
யுவராஜ் சிங்கும் உடன்சென்றார்
இந்நிலையில் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் இந்திய ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் மெல்போர்னுக்கு சென்றுள்ளனர். அவர்கள் தங்களது பயிற்சியை இன்று மேற்கொள்ளவுள்ள நிலையில் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர், இந்த போட்டியில் பயிற்சியாளராக தன்னை அழைத்ததும் உடனடியாக ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார்.
சச்சின் டெண்டுல்கர் உருக்கம்
இந்தக் காட்டுத்தீக்கு 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதற்கு வருத்தம் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், ஆனால் விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவையும் லட்சக்கணக்கில் உயிரிழந்துள்ளதை சுட்டிக்காட்டினார். அவற்றை நாம் அதிகமாக கவனத்தில் கொண்டு பேச மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், அதுவும் முக்கியமானதுதான் என்றும் கூறியுள்ளார்.
"என்னை பிரதிபலிக்கும் லாபுசாக்னே"
ஆஸ்திரேலியாவை தனக்கு எப்போதும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய 18வது வயதில் 4 மாதங்கள் ஆஸ்திரேலியாவில் தங்கி கிரிக்கெட் போட்டிகளை விளையாடியதாகவும், அது தனது கேரியருக்கு மிகவும் உதவியாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் தற்போது விளையாடிவரும் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே தன்னை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
|
ஐசிசி டிவீட்
லாபுசாக்னே குறித்த சச்சின் டெண்டுல்கரின் கருத்துக்களை மேற்கோள் காட்டி ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் லாபுசாக்னேவின் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. மேலும் சச்சின் டெண்டுல்கரின் வார்த்தைகளையும் அவரது புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளது. சமீப காலங்களாக தனது சிறப்பான ஆட்டத்தின்மூலம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுவரும் லாபுசாக்னே குறித்து சச்சினின் இந்த விமர்சனம் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.