மும்பை: இந்திய அளவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடரில் விதர்பா அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார் அந்த அணியின் கேப்டன் கருண் நாயர். யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி ரன் குவித்து வரும் கருண் நாயரை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
விஜய் ஹசாரே தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 752 ரன்களை குவித்து இருக்கிறார் கருண் நாயர். அவரது சராசரி 752 ஆகும். அவர் ஆடிய ஏழு இன்னிங்ஸ்களில் ஒரு முறை மட்டுமே தனது விக்கெட்டை இழந்து இருக்கிறார். மேலும், ஐந்து சதம் மற்றும் ஒரு அரை சதத்தை அடித்து இருக்கிறார்.

இந்தத் தொடரின் கால் இறுதி போட்டியிலும் சதம் அடித்த கருண் நாயர், அரை இறுதி போட்டியில் விதர்பா அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் 44 பந்துகளில் 88 ரன்களை சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மகாராஷ்டிரா அணிக்கு எதிரான அந்த அரை இறுதி போட்டியில் விதர்பா அணி 50 ஓவர்களில் 380 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். அந்தப் போட்டியில் விதர்பா வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்த நிலையில் கருண் நாயரை சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவு - " கருண் நாயர் 7 இன்னிங்ஸ்களில் 752 ரன்களை குவித்து, அதிலும் ஐந்து சதங்களை அடித்து இருப்பது அசாதாரணமான நிகழ்வுக்கு எந்த வகையிலும் குறைவு இல்லை. இதுபோன்ற செயல்பாடுகள் எதைச்சையாக நடக்காது. ஆழ்ந்த கவனம் மற்றும் கடின உழைப்பால் மட்டுமே இது சாத்தியம். வலுவாக இருங்கள். உங்களுக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துங்கள்." என்று பாராட்டி இருக்கிறார் சச்சின்.
கருண் நாயரின் இந்த அசாத்தியமான ஆட்டத்தை முன் வைத்து அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் அளிக்க வேண்டும் எனவும், அவரை 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தேர்வு செய்து விளையாட வைக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சரியாக இந்திய அணித் தேர்வு நாளை (ஜனவரி 18) நடைபெற உள்ள நிலையில் சச்சின் டெண்டுல்கர் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார். வாய்ப்பு கொடுக்குமா பிசிசிஐ?