மும்பை : சச்சின் டெண்டுல்கரின் அதிக சதம், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை யாராலும் நெருங்க முடியாது என்ற கருத்து 90ஸ் கிட்ஸ் களால் ஆணித்தரமாக நம்பப்பட்டது. ஆனால் சச்சின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 சதம் என்ற மாபெரும் ரெக்கார்டை தற்போது விராட் கோலி சமன் செய்துள்ளார்.
இதன் மூலம் சச்சினின் மற்ற சாதனைகளும் முறியடிக்க முடியும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சச்சின் மகத்தான சாதனையை யார் முறியடிப்பார் என்று சச்சின் இடமே 11 ஆண்டுகளுக்கு முன்பு கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சல்மான் கான் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த கேள்வியை சச்சின் இடம் கேட்டு இருக்கிறார். உங்களுடைய சாதனையை யார் முறியடிப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு எழுந்து நின்று பதில் அளித்த சச்சின் டெண்டுல்கர்,இந்த ரூமில் இருக்கும் நமது அணி வீரர்கள் தான் இந்த ரெக்கார்டை முறியடிப்பார்கள் என்று கூறினார்.
அதற்கு சல்மான் கான் எந்த வீரர் என்று பெயரை குறிப்பிட முடியுமா என கேட்டார். அதற்கு சச்சின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருக்கும் அந்த வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன் என்று கூறினார். தற்போது சச்சின் டெண்டுல்கர் கணித்தது போலவே விராட் கோலி தற்போது 49 சதம் அடித்திருக்கிறார். அதேபோலவே ரோகித் சர்மாவும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 30 சதம் அடித்து இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
இதேபோன்று இங்கிலாந்து பத்திரிக்கையாளர் ஒருவர் வெளியிட்டுள்ள செய்தி பதிவில், விராட் கோலி ஒன்பது சதங்கள் அடித்து இருந்த போது நான் அவரிடம் கேள்வி கேட்டேன். சச்சினின் சாதனை உங்களால் முறியடிக்க முடியுமா எனக் கேட்டேன். அதற்கு நான் அதை நோக்கி தான் பயணம் செய்கிறேன். நிச்சயமாக சச்சின் சாதனையை நான் முறியடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கோலி கூறியதாக தற்போது அவர் சுட்டிக் காட்டி உள்ளார். சாதனைகள் படைப்பது என்பது சாதனைகள் உடைக்கப்படுவதற்கு தான் என்று கவாஸ்கர்,சச்சின் தனது சாதனை முறியடிக்கும் போது கூறி இருந்தார். தற்போது அது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.