டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும் என்று கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் முழு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்தியா 2-1 என வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரை இங்கிலாந்து 2-1 என வென்றது.
இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:
இந்திய அணி மிகவும் வலிமையாகவே உள்ளது. டி-20 மற்றும் ஒரு தினப் போட்டிகளில் அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகவே உள்ளார்.
மைதானத்தின் தன்மை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தால், இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அஸ்வின், ஜடேஜா ஆகியோருடன் குல்தீப் யாதவும் சேர்வது நமக்கு பலமே.
பேட்டிங் செய்யக் கூடிய பவுலர்கள், பவுலிங் செய்யக் கூடிய பேட்ஸ்மேன்கள் உள்ளது இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாகும்.
காயம் காரணமாக சில வீரர்கள் விளையாடவில்லை. எப்போதும் வழக்கமான 11 வீரர்களுடன் களமிறங்குவது சிறப்பாகவே இருக்கும். அதே நேரத்தில் எந்த விளையாட்டாக இருந்தாலும் காயம் என்பதை தவிர்க்க முடியாது.
வழக்கமான வீரர்கள் இல்லை என்பதால், வெற்றி நம் கையைவிட்டு போய்விடாது. தற்போதைய நிலையில், இந்தத் தொடரை வெல்வதற்கு இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு டெண்டுல்கர் கூறியுள்ளார்.