மும்பை: மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தின் 50 வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார். அவர் மேடைக்கு வந்த போது மைதானம் முழுவதும் நிரம்பி இருந்த ரசிகர்கள் "சச்சின், சச்சின்" என கோஷம் எழுப்பினர்.
13 ஆண்டுகளுக்கு முன் இதே வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று இருந்தார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவருக்கான புகழ் இம்மி அளவும் குறையாததை இந்த நிகழ்வு உணர்த்தியது. இந்த சம்பவத்தால் சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி அடைந்தார்.

அவர் தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியை வான்கடே மைதானத்தில் தான் ஆடி இருந்தார். அது ஏன்? என்பது பற்றி அவர் விவரித்து இருந்தார். மேலும், வான்கடே மைதானத்தில் டிக்கெட் இல்லாமல் பார்த்த தனது முதல் கிரிக்கெட் போட்டி அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
"ஒரு முக்கியமான காரணத்திற்காக எனது கடைசி போட்டியை மும்பையில் விளையாட வேண்டும் என்று நான் விரும்பினேன். என் தாய் நான் ஆடிய எந்த கிரிக்கெட் போட்டியையும் நேரில் பார்த்ததில்லை. அவர் என் கடைசி போட்டியை நேரில் வந்து பார்க்க வேண்டும் என விரும்பினேன்." என்றார் சச்சின் டெண்டுல்கர்.
மேலும், "அந்த நேரத்தில், அவரது உடல்நிலை சரியாக இல்லை. வான்கடேவைத் தவிர, என் தாய் பயணம் செய்வதற்கு ஏற்ற இடம் வேறு இல்லை. என் கடைசி போட்டியை என் தாய் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். எனது கோரிக்கையை பிசிசிஐ கருணையுடன் ஏற்றுக்கொண்டது." என்றார்
சச்சின் டெண்டுல்கர்.தனது சிறுவயதில் தனது நண்பர்களுடன் பெரிய குழுவாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியை பார்க்க வான்கடே மைதானத்துக்கு சென்றது பற்றியும் சச்சின் கூறினார். அதுவே சச்சின் டெண்டுல்கர் நேரில் பார்த்த முதல் சர்வதேச போட்டி. அப்போது 24 டிக்கெட்கள் மட்டுமே வைத்து இருந்த நிலையில் அவரது நண்பர்கள் 25 பேர் அந்தப் போட்டியை நேரில் கண்டுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் உயரம் குறைவாக இருப்பதை பயன்படுத்தி அவரது நண்பர்கள் அவரை கூட்டத்தில் ஒளித்து வைத்து உள்ளே சென்று விட்டதாக அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கோஷமிட்டு போட்டியை பார்த்ததாகவும் கூறினார்.