மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டெண்டுல்கரின் கடைசி டெஸ்ட் போட்டிகளை முன்வைத்து ரூ800 முதல் ரூ900 கோடி வரையில் பெட்டிங் நடத்த புக்கிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சச்சின் டெண்டுல்கர் தமது 200-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் விளையாடும் 199-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்திலும், 200-வது சர்வதேச கிரிக்கெட் போட்டி சொந்த மண்ணான மும்பை வான்கடே மைதானத்திலும் நடைபெறுகிறது.
இந்தநிலையில் டெண்டுல்கர் விளையாட உள்ள சர்வதேச கடைசி 2 டெஸ்ட் போட்டிகளை குறிவைத்து அதிக அளவில் பெட்டிங் நடத்த கிரிக்கெட் புக்கிகள் திட்டமிட்டுள்ளனர்.
டெண்டுல்கர் அடிக்கும் ஒவ்வொரு ரன், அரைசதம், சதம், இரட்டை சதம் மற்றும் முச்சதம் உள்ளிட்டவற்றை பொறுத்து பெட்டிங் தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும். இதேபோன்று இந்திய அணியின் வெற்றி, தோல்வியை பொறுத்தும் பெட்டிங் நடத்தப்படுகிறது.
கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெறும் 2 ஆட்டங்களிலும் தலா ரூ.850 கோடி முதல் ரூ.900 கோடி வரையில் பெட்டிங் நடைபெறும் என்று கூறப்படுகிறது.