மும்பை: 2025 இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணி அபாரமாக ஆடி இறுதிப் போட்டியை வென்று கோப்பையையும் கைப்பற்றியது.
இந்தத் தொடரில் முன்னாள் வீரர்கள் அடங்கிய ஆறு அணிகள் பங்கேற்றன. இந்தத் தொடரின் இறுதி போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணியும், பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியும் தகுதி பெற்றன.

இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. பிரையன் லாரா துவக்க வீரராக இறங்கி 6 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். டுவைன் ஸ்மித் 35 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். லென்டில் சிம்மன்ஸ் 41 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
இந்தியா மாஸ்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் வினய் குமார் மூன்று விக்கெட்டுகளையும், ஷபாஸ் நதீம் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். அடுத்து இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு அம்பத்தி ராயுடு மற்றும் சச்சின் டெண்டுல்கர் துவக்கம் அளித்தனர்.
சச்சின் 18 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அம்பத்தி ராயுடு 50 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து 15 வது ஓவரில் ஆட்டம் இழந்தார். அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி இருந்தார். அவரது ஆட்டத்தால் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றியை நெருங்கியது.
அதிரடி மன்னன் யுவராஜ் சிங் 11 பந்துகளில் 13 ரன்களும், ஸ்டுவர்ட் பின்னி 9 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்தியா மாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
யுவராஜ் சிங் 11 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்தார். அவர் சிக்சர் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். ஸ்டூவர்ட் பின்னி கடைசி நேரத்தில் இரண்டு சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை காண வந்த ரசிகர்கள் இந்தியா மாஸ்டர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடினர்.