பெங்களூர்: கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட தொடரில் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட்டின் விக்கெட்டை சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வீழ்த்தி இருக்கிறார். இரு ஜாம்பவான் வீரர்களின் வாரிசுகளும், ஒரே போட்டியில் நேருக்கு நேர் மோதி இருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் முக்கியமானவர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட். இவர்கள் இருவரும் ஒன்றாக ஆடி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது இவர்களின் வாரிசுகள் கிரிக்கெட் களத்திற்கு வந்துள்ளனர். இதில் ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமாகிவிட்டார்.

இன்னொரு பக்கம் ராகுல் டிராவிட் தனது இரு மகன்களையும் தீவிரமாக தயார் செய்து வருகிறார். அதிலும் மூத்த மகன் சமித் டிராவிட் தற்போது மகாராஜா டிராபி வரை உயர்ந்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒரே போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றனர். கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பாக திம்மையப்பையா டிராபி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கர்நாடகா கிரிக்கெட் சங்க தலைவர் பிளேயிங் லெவன் அணிக்காக ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கோவா அணிக்காக சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆடி வருகிறார். இந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் ஆளூர் மைதானத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கோவா அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களை குவித்தது. இதில் 9வது பேட்ஸ்மேனாக ஆடிய அர்ஜுன் டெண்டுல்கர் 20 பந்துகளில் 9 ரன்களை எடுத்தார். ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் பின் கோவா அணி பவுலிங்கை தொடங்கியது. கர்நாடகா கிரிக்கெட் சங்கத் தலைவர் பிளேயிங் லெவன் அணி 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது சமித் டிராவிட் களமிறங்கினார். அவர் சில பவுண்டரிகளை அடித்த நிலையில், பார்ட்னர்ஷிப் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது அர்ஜுன் டெண்டுல்கர் பந்தில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் முதல் நாள் ஆட்டம் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.