பெங்களூர்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 14,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார்.
பெங்களூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியின்போதுதான் இந்த சாதையைப் படைத்தார் சச்சின். நேற்றைய போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 14,000 ரன்களைக் கடந்தார்.
2வது டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை 478 ரன்களுக்கு இழந்தது.
இதையடுத்து இந்தியா தனது பேட்டிங்கைத் தொடங்கியது. ஷேவாக்கும், டிராவிடும் விரைவிலேயே ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா தடுமாறியது. இருப்பினும் முரளி விஜய்யும், சச்சினும் இணைந்து விக்கெட் வீழ்ச்ச்சியைத் தடுத்து நிதானமாக ரன்களைக் குவிக்கத் தொடங்கினர்.
நேற்றைய ஆட்ட இறுதியில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் 44 ரன்களுடனும், முரளி விஜய் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 90 ரன்களைச் சேர்த்துள்ளனர்.
நேற்றைய ஆட்டத்தின் சிறப்பம்சமாக சச்சினின் 14,000 ரன் சாதனை அமைந்தது. தற்போது அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பான்டிங் இருக்கிறார். இருப்பினும் சச்சினை விட 1822 ரன்கள் பின்தங்கியுள்ளார் பான்டிங் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று சச்சின் தனது சாதனை ரன்னை அடித்த பின்னர் பான்டிங் முதல் ஆளாக வந்து சச்சினைப் பாராட்டினார்.