மும்பை: சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே கொரோனாவைரஸ் நிவாரணப் பணிகளுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இந்த நிலையில் மேலும் 5000 பேருக்கு உதவப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நிதி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 25 லட்சம் உதவியை ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இன்னொரு முக்கியமான உதவியை சச்சின் அறிவித்துள்ளார்.

5000 பேருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான ரேஷன் பொருட்களை சச்சின் டெண்டுல்கர் வழங்கவுள்ளார். சிவாஜி நகர் மற்றும் கோவந்தி பகுதிகளில் உள்ள 5000 பேருக்கு ஒரு என்ஜிஓ மூலமாக இந்த உதவியை சச்சின் டெண்டுல்கர் செய்துள்ளார்.
இந்த உதவிகளை செய்ய சச்சின் தேர்வு செய்துள்ள என்ஜிஓ அமைப்பான அப்னாலயா அமைப்பு இதுதொடர்பாக ஒரு டிவீட் வெளியிட்டு சச்சினுக்கு நன்றி தெரிவித்துள்ளது. அதில், மிகவும் நன்றி.. சச்சின் டெண்டுல்கர் அப்னாலயா மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. 5000 பேருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான ரேஷன் பொருட்களை சச்சின் டெண்டுல்கர் வழங்குவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சச்சினும் ஒரு டிவீட் போட்டுள்ளார். அப்னாலயா அமைப்பு தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உதவிகள் தேவைப்படுவோருக்கும் தொடர்ந்து உதவ வேண்டும். உங்களது சேவை தொடரட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.