மும்பை: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இலங்கை வீரர் குமார் சங்ககாராவை ஓய்வு பெற்றவர்கள் கிளப்புக்கு வரவேற்றுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த கையோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேரத்தில் அவர் ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு சிறப்பான முறையில் பிரிவு உபச்சாரம் அளிக்கப்பட்டது. பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சிறப்பாக விளையாடினீர்கள் சங்ககாரா. நீங்கள் இந்த விளையாட்டின் சிறப்பான அம்பாசிடர் மற்றும் பக்கா ஜென்டில்மேன். ஓய்வு பெற்றவர்கள் கிளப்பிற்கு உங்களை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.