மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2கே கிட்ஸ்கள் விராட் கோலியின் ஆட்டத்தை வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் அது கொண்டாடப்பட வேண்டிய ஆட்டம் தான். ஆனால் இருப்பதிலேயே விராட் கோலி தான் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று அவர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
இது 90ஸ் கிட்ஸ்களை கோபம் அடைய வைத்திருக்கிறது. இந்த தருணத்தில் தான் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 52 வயதிலும் பட்டையை கிளப்பி ஒரு சூப்பரான இன்னிங்சை ஆடினார்.

இதைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த தருணத்தில் 52 வயதில் கூட சச்சின் நன்றாக விளையாடி வரும் போது ஏன் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பதை தற்போது பார்க்கலாம். சச்சின் கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம். அப்போது சச்சினின் வயது 40.
தன்னுடைய கடைசி ஆட்டத்தில் கூட சச்சின் டெண்டுல்கர் 118 பந்துகளில் 74 ரன்கள் அடித்திருந்தார். சச்சினை விட்டிருந்தால் தோனி எப்படி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடுகிறாரோ அதே போல் சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடி இருப்பார். அந்த அளவுக்கு சச்சினிடம் உடல் தகுதியும் திறனும் இருந்தது.
ஆனால் மற்ற வீரர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால்தான் சச்சின் டெண்டுல்கர் விலகிச் சென்றார். ஆனால் இது சச்சினாகவே முடிவு எடுக்கவில்லை என்பதும் உண்மைதான். உதாரணமாக, ஒரு நாள் கிரிக்கெட்டிலும் சச்சின் தொடர்ந்து விளையாடி வந்தார். 2012 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் கூட சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்திருந்தார்.
அவ்வளவு ஏன் தன்னுடைய கடைசி இன்னிங்ஸில் அவர் 48 பந்துகளில் 52 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சீனியர் வீரர்கள் வழிவிட வேண்டும் என்பதில் தோனி தெளிவாக இருந்தார். சச்சின் டெண்டுல்கர் ஆசியக் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக தன்னுடைய நூறாவது சதத்தை பூர்த்தி செய்தார். 147 பந்துகளை எதிர்கொண்டு சச்சின் 114 ரன்கள் சேர்த்தார்.
சதம் அடிப்பதற்காக சச்சின் சில பந்துகளை எடுத்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது. இதன் காரணமாக அந்த ஆட்டத்தில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்திய அணி மற்றும் ஒரு 20, 30 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்ற கருத்தும் நிலவியது.
தன்னுடைய கடைசி இரண்டு இன்னிங்ஸில் சதம், அரை சதம் அடித்த நிலையில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு தமது பேட்டிங்கை காரணம் காட்டுகிறார்கள் என்பதை உணர்ந்த சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தினார்.
அப்போதும் சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பட்டையை கிளப்பினார். குறிப்பாக சச்சின் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று அரை சதம் அடித்திருந்தார். ஆனால் சச்சினால் தனக்கு பிடித்த சதத்தை நெருங்க முடியவில்லை. இந்த காலகட்டத்தில் தான் இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது.
இதெல்லாம் மறைமுகமாக சச்சினுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடலாம் என்ற முடிவை சச்சின் எடுத்தார். சீனியர் வீரர்கள் அணியை விட்டு செல்ல வேண்டும் என தோனி முடிவெடுத்தாலும், அவர் சச்சினை எதுவும் சொல்லவில்லை. ஆனால் காலம் மாற மாற களத்திற்கு புதிய வீரர்கள் வரவேண்டும் என்பதை உணர்ந்த சச்சின் டெண்டுல்கர், இனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடப் போவதில்லை என முடிவெடுத்தார்.
ஆனால் சச்சின் 50 வயதை தாண்டியும் தற்போது விளையாடும் விதத்தை பார்க்கும் போது அவர் இன்னும் இருந்திருந்தால், பல ரெகார்டுகளை உடைத்து இருப்பார் என்பதில் இந்த சந்தேகமும் இல்லை.