மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றியது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் ஆசிய அணி மற்றும் நான்காவது அணி என்று பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது.
எப்படி 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் முதல்முறையாக உலக கோப்பையை வென்றாரோ அதேபோல் ஹர்மன் தலைமையிலான இந்திய மகளிர் அணி ஒரு புது சரித்திரத்தை படைத்திருக்கிறது. இந்த போட்டியை மைதானத்தில் நேரில் கண்டு களித்த சச்சின் டெண்டுல்கர், இந்திய வீராங்கனைகளுக்கு தற்போது மனதார ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி பெற்ற வெற்றி ஒரு தலைமுறையே கனவு காணவும், அந்த கனவை துரத்தி பிடிக்கவும் தூண்டியது. தற்போது அதேபோல் மகளிர் கிரிக்கெட் அணி ஒரு ஸ்பெஷலான சரித்திரத்தை படைத்திருக்கிறார்கள். இந்த உலகக்கோப்பை வெற்றி நாட்டில் உள்ள பல வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும்.
பல பெண்கள் இனி பேட்டை கையில் எடுத்து கிரிக்கெட் விளையாட களத்திற்கு வருவார்கள். தங்களாலும் ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு பிறந்திருக்கும். இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் இது. ஒட்டுமொத்த நாட்டையும் இந்திய மகளிர் அணி பெருமைப்படுத்தி இருக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பதிவிட்டுள்ள விராட் கோலி, பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தக்கூடிய வெற்றியை இந்திய மகளிர் அணி இன்று பெற்றிருக்கிறது. ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் வெற்றி இது. அச்சமின்றி நம்பிக்கையுடன் விளையாடி வென்று இருக்கிறீர்கள். இந்த வெற்றி உங்கள் அனைவருக்கும் தகுதியானது. இந்த வெற்றியை முழுமையாக கொண்டாடுங்கள். ஹர்மன் மற்றும் அவரது அணியினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் என்று கூறியுள்ளார்.