பலமான அணி
90களின் ஆஸ்திரேலியா ஸ்டீவ் வாஹ் தலைமையில் பலமான அணியாக இருந்தது. 90களின் பிற்பகுதியில் அனைத்து கிரிக்கெட் ஆடும் நாடுகளும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை கண்டு அஞ்சியது. அப்போது வேகப் பந்துவீச்சாளர் மெக்கிராத் தன் உச்சகட்ட பார்மில் இருந்தார்.
டெஸ்ட் தொடர்
1999மாவது ஆண்டில் இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடரில் ஆட ஆஸ்திரேலியா சென்றது. அப்போது இந்திய அணியில் அனுபவ சச்சின், கங்குலி, அனில் கும்ப்ளே ஒரு புறம் இருக்க, டிராவிட், லக்ஷ்மன் போன்ற திறமையான வீரர்களும் அணியில் இருந்தனர்.
சவால் விட்ட சச்சின்
ஆனாலும், ஆஸ்திரேலிய அணியின் மெக்கிராத், பிரெட் லீ, டேமியன் பிளெம்மிங் மற்றும் ஷேன் வார்னே பந்துவீச்சுக்கு இந்தியாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சவால் விட்டார். அந்த நால்வரும், தனக்கு போட்ட திட்டத்தை தெளிவாக உணர்ந்து சச்சின் ஆடினார்.
திட்டம் போட்ட ஆஸ்திரேலியா
அப்போது சிறந்த பேட்ஸ்மேன் சச்சினை வீழ்த்த ஆஸ்திரேலியா வகுத்த திட்டம் இதுதான். 70 சதவீத பவுன்ஸ் செய்து விக்கெட் கீப்பர் வசம் போக வைப்பது. 10 சதவீத பந்துகளை பேட்டுக்கு மிக அருகே வீச வேண்டும். மீதமுள்ள பந்துகளை அவுட்சைடு ஆஃப் திசையில் வீச வேண்டும்.
ஸ்லிப்பில் கேட்ச்
பவுன்ஸ் ஆகும் பந்துகள் மற்றும் பேட்டுக்கு அருகே வரும் பந்துகளை எப்படியும் சச்சின் அடிக்க மாட்டார். அவுட்சைடு ஆஃப் திசையில் செல்லும் பந்துகளை சச்சின் அடிக்கும் பட்சத்தில் அவர் ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க அதிக வாய்ப்பு கிடைக்கும்.
தடுப்பாட்டம்
இதுதான் மெக்கிராத், டேமியன் பிளெம்மிங், பிரெட் லீ வேகப் பந்துவீச்சு கூட்டணியின் திட்டமாக இருந்தது. முதல் போட்டியிலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், சச்சின் இந்த திட்டத்தை தெளிவாக உணர்ந்து மெக்கிராத் பந்துவீச்சில் முதலில் தடுப்பாட்டம் ஆடினார்.
அழுத்தம் தந்த சச்சின்
முதல் சில ஓவர்களை தொடர்ந்து மெய்டன் ஓவர்களாக ஆடி சமாளித்தார். அடுத்து ரன் எடுக்கத் துவங்கினார். அப்போது சில ஓவர்களை அடித்து ஆடி ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு அழுத்தம் கொடுத்தார். முதல் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் 61 ரன்கள் எடுத்தார். இரண்டாம் இன்னிங்க்ஸில் மெக்கிராத் வென்றார். சச்சின் டக் அவுட் ஆனார்.
சச்சின் ரன் குவிப்பு
அதனால், சச்சின் - மெக்கிராத் மோதல் இன்னும் சுவாரசியமானது. ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளில் சச்சின் ரன் குவித்தார். அந்த தொடரில் மூன்று போட்டிகளில் சச்சின் ஒரு சதம், இரண்டு அரைசதம் அடித்தார். ஒரு இன்னிங்க்ஸில் 45 ரன்கள் எடுத்தார். இரண்டு இன்னிங்க்ஸில் மட்டுமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
மூன்றாம் இடம்
அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர்கள் பாண்டிங் 375, லாங்கர் 289 ரன்கள் எடுத்து முதல் இரண்டு இடங்களில் இருந்தனர். சச்சின் 278 ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்தில் இருந்தார். மற்ற இந்திய வீரர்கள் மோசமாகவே ஆடினர்.
பரபரப்பான பேச்சுக்கள்
மெக்கிராத் மற்றும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சச்சின் சமாளித்து ஆடிய விதம் அப்போது வெகுவாக பாராட்டப்பட்டது. அதன் பின்பு தான் சச்சின் - மெக்கிராத் மோதல் பற்றிய பரபரப்பான பேச்சுக்கள் கிரிக்கெட் களத்தில் எழுந்தன.