மும்பை: கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், தனது இளம் வயதுச் சம்பவம் ஒன்றைப் பகிர்ந்து, முன்னாள் இந்திய வீரர் பிரவீன் ஆம்ரேவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சச்சின், 1980-களின் பிற்பகுதியில், தான் இந்திய அணிக்கு அறிமுகமாகும் முன்பு நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
ஒரு வெளிநாட்டு ஷூ-வை பெறுவதற்காக ஆசைப்பட்டதாகவும், அப்போது விடுக்கப்பட்ட சவால் பற்றியும் கூறினார். சச்சின் கூறியதாவது - "அப்போது நான் ஒரு இளம் வீரர். ஆஸ்திரேலியாவில் அண்டர்-19 தொடரில் விளையாடிவிட்டுத் திரும்பியிருந்த எனது சீனியர் வீரர் பிரவீன் ஆம்ரேவின் பேட்டிங்கைக் கூர்ந்து கவனிக்கச் சொன்னார் எனது பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கர்".
"நாங்கள் அவரது பேட்டிங்கை மிகவும் உன்னிப்பாகக் கவனிப்போம். அப்போது, அவர் பயன்படுத்தும் கிட், பேட், ஷூ போன்றவற்றையும் பார்ப்போம். ஒருநாள், அவரது கிட் பேக்கில் மிகவும் பிரபலமான, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிரிக்கெட் ஷூவைப் பார்த்தோம். அந்தக் காலத்தில் அப்படியான ஷூக்கள் இந்தியாவில் எளிதில் கிடைக்காது. அந்த ஷூ எங்களைக் கவர்ந்து இழுத்தது. பிரவீன் என்னிடம், 'ஒரு சதம் அடி, இந்த ஷூவை நீயே எடுத்துக்கொள்!' என்றார். அதன்படியே, நான் ஒரு போட்டியில் சதம் அடித்தேன்."

"ஆனால், சதம் அடித்த பிறகு, அவரிடம் சென்று நீங்கள் எனக்கு ஷூ தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள் என்று கேட்க எனக்குத் தைரியம் இல்லை. ஆனால், பிரவீன் அவர்களே என்னிடம் வந்தார். என் வாழ்க்கையின் முதல் தரமான ஷூவை அவர்தான் எனக்குப் பரிசாகக் கொடுத்தார். அதை என்னால் மறக்கவே முடியாது" என்று சச்சின் உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.
சச்சின் இந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்ததைக் கேட்டு, பிரவீன் ஆம்ரே நெகிழ்ச்சியில் ஆழ்ந்தார். சச்சினின் இந்தப் பேச்சு குறித்து அவர் கூறுகையில், "சச்சின் இதைச் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தச் சின்ன உதவியை அவர் நினைவில் வைத்திருந்ததைக் கண்டு நான் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டேன். நான் அதை முழுவதுமாக மறந்தே போய்விட்டேன்" என்றார்.
"இதுதான் சச்சினை ஒரு உண்மையான ஜாம்பவானாக மாற்றுகிறது. எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. அது ஒரு இறக்குமதி செய்யப்பட்ட ஸ்பைக் ஷூ. கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக உருவெடுத்த, சரியான ஒரு நபருக்குத்தான் அந்தப் பரிசைக் கொடுத்துள்ளேன் என்பதில் நான் இன்று பெருமைப்படுகிறேன்." என்று பிரவீன் ஆம்ரே நெகிழ்ச்சியுடன் கூறினார்.