டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 10 ஆக குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு சச்சின் டெண்டுல்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அணிகளைக் குறைப்பதற்குப் பதில் தற்போது உள்ள சாதாரண குட்டி அணிகளின் தரத்தை உயர்த்த ஐசிசி நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கிரிக்கெட்டை உலகளாவியதாக மாற்ற வேண்டுமானால், தரத்தைக் குறைத்துக் கொள்ளாத வகையில் மேலும் பல அணிகளை உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் ஆடச் செய்ய வேண்டும். மேலும் சாதாரண அணிகளாக தரம் குறைந்ததாக கருதப்படும் அணிகளின் தரத்தை உயர்த்த நாம் உதவி செய்ய வேண்டும்.
இதற்காக முன்னணி அணிகள் தங்களது ஏ அணிகளை வளரும் அணிகளின் நாடுகளுக்கு அனுப்பலாம். உதாரணத்திற்கு இந்திய ஏ அணி, ஜிம்பாப்வே, வங்கதேசம், ஸ்காட்லாந்து, அயர்லாந்துக்குச் செல்லலாம். அங்கு கிரிக்கெட் போட்டிகளை அதிக அளவில் நடத்தலாம்.
அதேபோல ஆஸ்திரேலிய ஏ, நியூசிலாந்து ஏஅணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்லலாம். இதுபோன்ற பயணங்கள் அந்த நாடுகளின் கிரிக்கெட் அணியை தரம் உயர்ந்ததாக மாற்ற உதவும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "எனக்கென்று சொந்த அடையாளம் இருப்பதையே நான் விரும்புவேன். கம்பேரிசன்களை விரும்ப மாட்டேன். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அது ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப மாறும். எனவே நமக்கு முன்னாள் இருப்பவர்களுடன் நம்மை ஒப்பிட முடியாது. நம்மை நமக்குப் பின் வருபவர்களிடம் ஒப்பிடக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.