மும்பை: 90களில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே மைதானத்தில் அனல் பறக்கும். அதிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்துவது என்பது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய கவுரவமாகக் கருதப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், சச்சின் விக்கெட்டை எடுக்க சக வீரரான சக்லைன் முஷ்டாக்குடன் செய்துகொண்ட பந்தயம் குறித்தும், அதற்காக தாங்கள் அனுபவித்த உடல் வலிகள் குறித்தும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தற்போது மனம் திறந்துள்ளார்.
1998-99ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடர் கிரிக்கெட் வரலாற்றில் இரு நாடுகளுக்கும் இடையேயான மிக முக்கியமான தொடர்களில் ஒன்றாக இன்றும் நினைவுகூரப்படுகிறது. குறிப்பாக சென்னை டெஸ்ட் போட்டியில் சச்சின் அடித்த 136 ரன்களும், அந்தப் போட்டியில் பாகிஸ்தான் பெற்ற வெற்றியும் மறக்க முடியாதவை.

இந்தத் தொடரின்போது சச்சின் விக்கெட்டை யார் வீழ்த்துவது என்பது தொடர்பாகத் தனக்கும் சக்லைன் முஷ்டாக்கிற்கும் இடையே நடந்த சவால் குறித்து அக்தர் பேசியுள்ளார். "சென்னையிலும், டெல்லியிலும் சக்லைன் ஏற்கனவே சச்சின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே ஒரு பந்தயம் உருவானது. சச்சினை நான்தான் தொடர்ந்து வீழ்த்துவேன் என்று சக்லைன் கூறினார். ஆனால் நான், இல்லை இந்த முறை எனது முறை, நான் வீழ்த்துவேன் என்று கூறினேன்" என அக்தர் நினைவுகூர்ந்துள்ளார்.
அந்தக் காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்துவது என்பது வெறும் திருப்புமுனைக்கானது மட்டுமல்ல, அது பந்துவீச்சாளர்களின் தனிப்பட்ட பெருமையாகவும் பார்க்கப்பட்டது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சியாகும்.
சச்சினை வீழ்த்த வேண்டும் என்ற இந்த சவாலுக்குப் பின்னால் அவர்கள் அனுபவித்த கடுமையான உடல் ரீதியான வலிகளையும் அக்தர் பகிர்ந்துள்ளார். "அந்தத் தொடரின்போது எனது மூட்டுப் பகுதியில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது. போட்டியில் தொடர்ந்து விளையாடுவதற்காக நான் ஊசிகளைச் செலுத்திக் கொண்டேன்" என்று அவர் கூறினார்.

தனது வலியை மட்டும் சொல்லாமல், சக்லைன் முஷ்டாக்கின் உடல்நிலை குறித்தும் அக்தர் பேசினார். "1996ஆம் ஆண்டிலேயே சக்லைனுக்கு மூட்டுப் பிரச்சனை வந்துவிட்டது. 1997ல் அவருக்கு முன்பாகவே எனக்கும் அதே பிரச்சனை ஏற்பட்டது. ஆனாலும், இந்தியாவுக்கு எதிரான அந்தத் தொடரில் விளையாடுவதற்காக எங்கள் இருவருக்கும் காயம் இருப்பது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மாத்திரைகளைச் சாப்பிட்டும், ஊசி செலுத்திக் கொண்டும் விளையாடினோம்" என்று அக்தர் தெரிவித்துள்ளார்.

"எங்களில் ஒருவர் தொடரிலிருந்து வெளியேறினாலும், அது மற்றொருவரையும் பாதிக்கும். என் மீது ஏற்கனவே அணிக்குள் அதிக நெருக்கடி இருந்தது. எனவே இந்த வாய்ப்பை எந்தக் காரணத்திற்காகவும் நழுவவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்" என்று சோயப் அக்தர் கூறியுள்ளார்.
இவ்வாறு இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆடிய நாட்கள் இப்போது இல்லை என்ற விமர்சனமும் சமீப காலமாக எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணி தற்போது இந்திய அணிக்கு ஈடு கொடுத்து ஆடுவதில்லை என்றும், அதனாலேயே இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் முன்பு போல சுவாரசியமாக இல்லை என்ற விமர்சனமும் உள்ளது.