அகமதாபாத்: கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது, இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாகப் பொறுப்பேற்ற சுப்மன் கில், இங்கிலாந்து மண்ணில் ரன் மலையைக் குவித்தார். ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75.40 என்ற சராசரியில் நான்கு சதங்களுடன் 754 ரன்களை விளாசி, விமர்சகர்களின் வாயை அடைத்தார்.
வெளிநாடுகளில் சரியாக விளையாடுவதில்லை என்ற தன் மீதான அழுத்தத்தைத் தகர்த்தெறிந்த இந்த அபாரமான ஆட்டத்திற்குப் பின்னால், கிரிக்கெட்டின் இரண்டு மாபெரும் ஜாம்பவான்களின் ஆலோசனைகள் இருந்திருக்கின்றன என்ற ரகசியத்தை அவர் தற்போது உடைத்துள்ளார்.
அந்த இங்கிலாந்து தொடருக்குக் கிளம்புவதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரிடமும் அவர் ஆலோசனை கேட்டிருக்கிறார். "இந்தியாவுக்கு வெளியே சரியாக ஆடவில்லை என்ற அழுத்தம் என் மீது இருந்தது. ஆனால், எனது பயிற்சி, எனது மனநிலை மற்றும் நான் பேட்டிங் செய்யும்போது எடுத்துக்கொண்ட நிலைகள் ஆகியவற்றில் நான் மிகவும் நம்பிக்கையுடன் உணர்ந்தேன்" என்று கில் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடுவதற்கான நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள யாரிடம் ஆலோசனை கேட்டீர்கள் என்ற கேள்விக்கு, "நான் சச்சின் சாரிடம் பேசினேன். அதேபோல, ஐபிஎல் அணியில் என்னுடன் விளையாடிய மேத்யூ வேட்டிடம் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தின் தொலைபேசி எண்ணை வாங்கி அவரிடமும் பேசினேன். இருவரும் ஒரே விஷயத்தைத்தான் சொன்னார்கள்: 'நேராகத் தடுப்பாட்டம் செய், ஸ்கொயர் திசையில் ரன்கள் எடு' என்றார்கள்" என்று சுப்மன் கில் கூறினார்.

கடந்த காலங்களில் சுப்மன் கில்லின் பேட்டிங்கில் இருந்த ஒரே குறை, அவர் முன் காலைப் பயன்படுத்தி ஆடுவதில் இருந்த தாமதம்தான். ஜேம்ஸ் ஆண்டர்சன், டிம் சௌத்தி, முகமது ஷமி போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்கள், குட் லென்த்தில் பந்தை வீசி உள்ளே திருப்பும்போது, அவரால் சரியான நேரத்தில் முன் காலை வைத்துத் தடுக்க முடியாமல் எல்.பி.டபிள்யூ அல்லது போல்ட் முறையில் ஆட்டமிழந்து வந்தார்.
இந்தச் சிக்கலைச் சரிசெய்ய சச்சின் டெண்டுல்கர் கூறிய ஆலோசனைகள் மிகவும் முக்கியமானவை. "பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் முன் காலில் ஆடும்போதுதான் ஆட்டமிழக்கிறார்கள். அதனால், முன் காலைச் சரியாக எடுத்து வைத்துச் சிறப்பாகத் தடுப்பாட்டம் ஆடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். டிரைவ் அடிப்பது என்பது அதன் ஒரு நீட்சிதான். ஆரம்பத்தில், பந்தை 'V' வடிவத்தில் நேராக விளையாட வேண்டும். இது பந்துகளைச் சரியாகக் கணித்து, தேவையில்லாத பந்துகளை விடுவதற்கும் உதவும்" என்று சச்சின் கூறியிருந்தார்.
சுப்மன் கில் முன் காலைப் பயன்படுத்தத் தயங்குவதற்குக் காரணம் அவரது சிறு வயதுப் பயிற்சிதான். சிமென்ட் தரைகளிலேயே கிரிக்கெட் விளையாடி வளர்ந்ததால், அவர் பெரும்பாலும் கிரீஸில் நின்றுகொண்டே அல்லது பின்னால் சென்று பந்தை எதிர்கொள்ளவே பழகியிருந்தார். இதுவே அவரது பலமாக இருந்ததால், அதை மாற்றுவது அவரது பேட்டிங் சமநிலையைக் குலைத்துவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த நுட்பம் அவருக்குப் பெரிய சவாலாக இருந்தது.
இந்தச் சூழலில்தான், சச்சின் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆலோசனைகள் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தன. இங்கிலாந்து தொடரில், அவர் முன்பை விட அதிகமாக முன் காலைப் பயன்படுத்தி ஆடியது தெளிவாகத் தெரிந்தது. சச்சின் சொன்ன அத்தனை அம்சங்களும் அவரது ஆட்டத்தில் வெளிப்பட்டன. பக்கவாட்டு நிலை, 'V' வடிவத்தில் தடுப்பாட்டம், நேர்மறையான முன் கால் நகர்வு என அனைத்தும் கச்சிதமாகப் பொருந்தின.
இரண்டு ஜாம்பவான்களின் ஆலோசனைகள் மற்றும் தொடருக்கு முன்னும் பின்னும் அவர் மேற்கொண்ட கடின உழைப்பு ஆகியவை சேர்ந்து, ஒரு கேப்டனாக அவரது முதல் டெஸ்ட் தொடரிலேயே, ரன் குவித்து சாதித்து இருக்கிறார்.