"இங்கிலாந்து கூட 3 ஸ்பின்னர் பயன்படுத்தினார்கள் ஆனா நீங்க.. " கம்பீரை விளாசிய சடகோபன் ரமேஷ்
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் புறக்கணிக்கப்பட்டது குறித்து, அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த ஒருநாள் தொடர் முழுவதுமே குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மூன்றாவது ஒருநாள் போட்டியில் பும்ரா காயம் அடைந்த நிலையில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை அணியில் தேர்வு செய்து இருந்தார் கம்பீர். இங்கிலாந்து 3 ஸ்பின்னர்களை பயன்படுத்திய நிலையில் இந்திய அணியில் அக்சர் பட்டேல் மட்டுமே ஒரே ஸ்பின்னராக இடம் பிடித்து. இது குறித்து சடகோபன் ரமேஷ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்து மோசமான தோல்விகளைச் சந்தித்தது. இது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள சடகோபன் ரமேஷ், "இங்கிலாந்து அணியே தங்களது பிளேயிங் லெவனில் 3 ஸ்பின்னர்களைப் பயன்படுத்தியது. மைதானமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகக் காய்ந்த நிலையில் இருந்தது. அப்படியிருக்கும் போது, பும்ரா இல்லாத இந்த பந்துவீச்சு வரிசையில் கூட குல்தீப் யாதவ் ஏன் சேர்க்கப்படவில்லை? இதில் என்ன லாஜிக் இருக்கிறது? அணியின் தேர்வு முறையிலும், பிளேயிங் லெவனைத் தேர்ந்தெடுப்பதிலும் தற்போதைய நிர்வாகம் தொடர்ந்து பெரிய தவறுகளைச் செய்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 194 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 27.04 என்பதாக உள்ளது. இத்தகைய சிறந்த செயல்பாட்டை கொண்ட ஒரு வீரருக்கு இங்கிலாந்து தொடரில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து தொடரில் தோல்வி அடைந்த போதிலும், தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சதம் அடித்த ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை சடகோபன் ரமேஷ் பாராட்டியுள்ளார். "தன் மீது கடுமையான அழுத்தம் இருந்தபோதும், ரோஹித் சர்மா ஒரு சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். ரோஹித், கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் அற்புதமாக விளையாடினர். ஆனால் 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தும் போது, பிட்ச் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியதால் இந்திய அணி ஏதோ ஒரு இடத்தில் சறுக்கும் என்று நாங்கள் நினைத்தோம். அதுதான் நடந்தது" என்று அவர் சடகோபன் ரமேஷ் கூறினார்.


Click it and Unblock the Notifications

