மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் துவக்க வீரராக இருந்த 38 வயதான ரோகித் சர்மா விலகியதோடு, ஓய்வையும் அறிவித்திருக்கிறார்.
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக இருக்கிறார். மற்றொரு துவக்க வீரரான ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்துக்கு நிலையாக ரன் குவிக்கக்கூடிய சாய் சுதர்சனை பிசிசிஐ தேர்வு குழு தேர்வு செய்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2025 ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார். 11 போட்டிகளில் விளையாடி 509 ரன்கள் சேர்த்துள்ளார். டி20 போட்டி என்றாலும் மிகவும் நேர்த்தியுடனும், பேட்டிங் நுணுக்கங்களை மிகச் சரியாகவும் கையாளக்கூடியவராகவும் இருந்து வருகிறார் சாய் சுதர்சன்.
அவரது நேர்த்தியான பேட்டிங்கைப் பார்த்த முன்னாள் வீரர்கள் அனைவரும், அவர் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு தகுதியான வீரர் என்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். மேலும் அவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவித்து வந்தார். தனது விக்கெட்டை அத்தனை எளிதில் அவர் விட்டுக் கொடுக்கவில்லை. இது போன்ற குணங்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு மிகவும் முக்கியமான அம்சங்களாகும். எனவே சாய் சுதர்சனுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்து மண்ணில் சாய் சுதர்சனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சாய் சுதர்சன் இங்கிலாந்து நாட்டின் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் சர்ரே அணியில் இடம்பெற்று விளையாடி வந்தார். எனவே அந்த அனுபவம் சாய் சுதர்சனுக்கு கை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற்றிருக்கிறார். வாஷிங்டன் சுந்தருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தாலும் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. இந்த நிலையில் மற்றொரு தமிழக வீரரான சாய் சுதர்சன் இந்திய அணியில் முக்கிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.