அகமதாபாத்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய தமிழ்நாட்டின் சாய் சுதர்சன் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். கடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக அரைசதம் விளாசிய அவர், தற்போது அடுத்தடுத்து போட்டிகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ரஷீத் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து குஜராத் அணி சார்பாக சாஹா - சுப்மன் கில் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இதில் நிதானமாக ஆடிய சாஹா 17 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் தமிழக வீரர் சாய் சுதர்சன் - கில்லுடன் கூட்டணி சேர்ந்தார்.

இதில் தொடக்கத்திலேயே சில பவுண்டரிகளை விளாசிய சாய் சுதர்சன் விரைந்து ரன்கள் சேர்த்தார். இதனால் குஜராத் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதேபோல் கேகேஆர் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான சுனில் நரைனை லாங் ஆஃபில் சிக்சர் அடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன், 34 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இது ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் அடிக்கும் மூன்றாவது அரைசதமாகும்.
பின்னர் அதிரடியாக ஆடிய முயன்ற சாய் சுதர்சன் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் களமிறங்கிய சாய் சுதர்சன் அரைசதம் விளாசியது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதேபோல் கடந்த போட்டியை விடவும் இந்தப் போட்டியில் சாய் சுதர்சன் கூடுதல் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் காணப்பட்டதால், வரும் போட்டிகளிலும் அவர் அதிக ரன்களை சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.