ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. உச்சம் தொட்ட சாம் கரண்.. சிஎஸ்கே vs பஞ்சாப் இடையே நடந்த யுத்தம்!
கொச்சி: ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் இங்கிலாந்து வீரரும், சுட்டிக்குழந்தையுமான சாம் கரண் புதிய வரலாற்றை படைத்து அசத்தியுள்ளார்.
2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஆல்ரவுண்டர்கள் மிகப்பெரிய கவனத்தை ஈர்ப்பார்கள் என கருதப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்தின் சாம் கரண் மீது அதிக எதிர்பார்புகள் நிலவி வந்தது.
ஏனென்றால் சென்னையில் இருந்து வெளியேறியிருந்த சாம் கரண், மீண்டும் சென்னை அணியால் வாங்கப்படுவாரா? என ரசிகர்கள் நினைத்தனர். அவர்கள் நினைத்ததை விட ஒரு பங்கு மேலாக போட்டி நடந்துள்ளது.

சாம் கரணின் ஏலம்
சாம் கரண் முதன் முதலில் ரூ. 2 கோடி என்ற அடிப்படை தொகையில் ஏலத்திற்கு விடப்பட்டார். இதற்கு தானே ஆசைப்பட்டோம் என்பது போல அனைத்து அணிகளும் ஒரே நேரத்தில் கைகளை உயர்த்த ஏலம் விடுபவரே திகைத்துப்போனார். மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் சற்றும் யோசிக்காமல் அடுத்தடுத்து கேட்டுக்கொண்டே இருந்ததால் வெகு சீக்கிரமாகவே ரூ. 10 கோடியை தாண்டியது.

சிஎஸ்கேவின் எண்ட்ரி
அதுவரை அமைதி காத்து வந்த சிஎஸ்கே, கெத்தாக களம் புகுந்தது. இதனால் பெங்களூரு, மும்பை அணிகள் போட்டியில் இருந்து விலக, சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் விடாப்பிடியாக போராடின. சென்னை அணியும் எப்படியாவது கடைக்குட்டியை அழைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ரூ. 15.25 கோடி வரை மல்லுக்கட்டி பார்த்தது. ஆனால் கையில் இருக்கும் தொகையே ரூ. 20.45 கோடி தான் என்பதால் வேறு வழியின்றி விலகியது.

நிற்காத போராட்டம்
சரி இப்போதாவது சாம் கரணின் வேட்டை நிற்குமா என்று பார்த்தால் லக்னோ அணி கடைசி நேரத்தில் புகுந்து பஞ்சாப்பிற்கு அதிர்ச்சி கொடுத்தது. எனினும் விடாப்பிடியாக போராடிய பஞ்சாப் இறுதியில் போராடி சாம் கரணை ரூ. 18.50 கோடி என்ற விலைக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை சாம் கரண் பெற்றார். இதற்கு முன்பு கிறிஸ் மோரிஸை ரூ. 16.50 கோடிக்கு வாங்கியதே ரெக்கார்டாக இருந்தது.

அப்படி என்ன ஸ்பெஷல்
சென்னை அணிக்காக ஐபிஎல்-ல் விளையாடி வந்த சாம் கரண், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அசுரத்தனமான ஃபார்மில் இருந்தார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே டி20 தயாரிப்பு போன்று ஆச்சரியம் தந்து வருகிறார். அவர் இருந்தால் ஃபினிஷிங் மற்றும் டெத் ஓவர் பவுலிங்கிற்கு பிரச்சினையே இருக்காது. இதனால் தான் இவ்வளவு போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications