அமீரகம்: சென்னை - பெங்களூரு ஆட்டம் நடைபெறவிருந்த சூழலில், ஷார்ஜாவில் மணல் புயல் வீசி வருவதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று (செப்.24) தொடங்கிய ஆட்டத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
இதில் டாஸ் போடுவதற்கு முன்பு ஷார்ஜாவில் பாலைவனப் புயல் (மணல் புயல்) வீசி வருகிறது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஐபிஎல் 2021 தொடரில் இரண்டாம் பகுதியில், முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்ட தோனி ஆர்மி, 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று தனது 2வது போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணியைப் பொறுத்தவரை தற்போது 12 புள்ளிகள் பெற்றிருப்பதால், இன்னும் 2 போட்டிகளில் வென்று 16 புள்ளிகள் பெற்றுவிட்டால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம்.
எனவே, எந்தவித சிக்கலும் இன்றி, பிளே ஆஃப் முன்னேற, இந்த போட்டியை பயன்படுத்திக் கொள்ள சிஎஸ்கே முயற்சிக்கும். அதேசமயம், 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாம் இடத்தில் உள்ளது. ஸோ, பிளே ஆஃப் ரேஸில் நீடிக்க இந்த போட்டி பெங்களூருவுக்கு சற்று முக்கியத்துவம் வாய்ந்ததே. குறிப்பாக, கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, படுதோல்வி அடைந்த நிலையில், இன்று பலம் வாய்ந்த சென்னை அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், ஷார்ஜாவில் பாலைவனப் புயல் வீசியதால், டாஸ் போடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. மைதானத்தைச் சுற்றி இளஞ்சிவப்பு நிறத்தில் மணல் புயல் வீசி வருகிறது. ஷார்ஜாவில் மணல் புயல் என்பது மிகச் சாதாரணமாக நிகழகக்கூடிய ஒன்று. இதற்கு முன்பு 1998ம் ஆண்டு ஷார்ஜாவில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் விளாசிய ஆட்டத்தின் போது இதே போன்று மணல் புயல் வீசியது.
1998 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் கோகோ கோலா கோப்பை போட்டி தொடரில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்றன. இந்திய அணி, நியூஸிலாந்தைவிட சிறந்த ரன் ரேட்டை பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 285 ரன்களை குவித்தது. பிறகு களமிறங்கிய இந்திய அணியில், கங்குலி 17 ரன்களில் ஆட்டமிழக்க, சச்சின் ஒரு பக்கம் நிதானமாக ரன் சேர்க்க தொடங்கினார். அப்போது ஆட்டத்தின் நடுவே பாலைவனப் புயல் வீசியதால் போட்டி நிறுத்தப்பட்டது.
பின்னர், புயல் ஓய்ந்து ஆட்டம் 46 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றாலும், 237 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணியில், ஆஸி அணியின் பவுலர்களை வெளுத்து வங்கிய சச்சின், 131 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் குவிக்க, இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதை ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது.