மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் டி20 உலகக்கோப்பை (2024) and சாம்பியன்ஸ் டிராபி (2025) என அடுத்தடுத்து கோப்பைகளை வென்று சாதித்திருந்தாலும், ரசிகர்களின் நெஞ்சில் இன்னும் ஆறாத வடுவாக இருப்பது 2023 ஒருநாள் உலகக்கோப்பை தோல்விதான். சொந்த மண்ணில், அகமதாபாத் மைதானத்தில் வைத்து ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்த அந்த சோகம் இன்றும் நம்மை வாட்டி வதைக்கிறது.
இந்நிலையில், அந்தத் தோல்விக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இப்போது வெளிப்படையாக பேசி இருக்கிறார். இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா செய்த ஒரு மிகப்பெரிய சொதப்பல்தான் தோல்விக்குக் காரணம் என்று அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் (JioHotstar) ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்காகத் தயார் செய்யப்பட்ட பிட்ச் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், "2023 உலகக்கோப்பையில் விளையாடிய அந்த இந்திய அணியைப் பார்த்து நான் மிகவும் பெருமைப்பட்டேன். அதுதான் உலகின் சிறந்த அணியாக இருந்தது. ஆனால், கேப்டன் ரோஹித் சர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் களத்திற்கு வெளியே சில விஷயங்களைக் கட்டுப்படுத்த நினைத்தார்கள். அதுதான் வினை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அகமதாபாத் பிட்சை அவர்கள் தேர்வு செய்த விதமும், அதை மாற்றியமைத்த விதமும் ஒரு 'இமாலயத் தவறு'. வேகம் குறைந்த அந்த ஆடுகளத்தில் பந்து மெதுவாக வரும்போது, சூர்யகுமார் யாதவ் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களால் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்பது நமக்குத் தெரியும். இருந்தும், வேண்டுமென்றே பிட்சின் தன்மையை மாற்றியது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்" என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
சுருக்கமாகச் சொன்னால், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்து வேகத்தைக் குறைத்து அமைக்கப்பட்ட அந்தப் பிட்ச், ஆஸ்திரேலிய பவுலர்களுக்குச் சாதகமாகவும், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எமனாகவும் மாறிப்போனது என்பதே மஞ்ச்ரேக்கரின் வாதம்.
இதே நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன், இந்தியாவின் மனநிலை குறித்துப் பேசினார். "இந்தியா சொந்த மண்ணில் எளிதாக வென்றுவிடும் என்று அனைவரும் முன்கூட்டியே கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். இது ஒரு விளையாட்டுப் போட்டி, இங்கே இரண்டு குதிரைகள் பந்தயத்தில் ஓடுகின்றன என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். ஆஸ்திரேலியா சிறப்பாகத் தயாராகி வந்திருந்தது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு, சொந்த மண்ணில் இப்படித் தோற்பது ஒரு பேரதிர்ச்சி" என்று கூறினார்.