உலகக்கோப்பை
கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது ஜடேஜாவுக்கும், முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் அந்த தொடரின் போது வர்ணனையாளாராக இருந்த மஞ்ச்ரேக்கர், ஜடேஜா ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர் இல்லை என்பது போல் கருத்து தெரிவித்திருந்தார். அதனால் இது ஜடேஜாவை சூடாக்கியது.
அசத்தல் ஆட்டம்
அந்த தொடரின் அரையிறுதிப்போட்டியின் போது நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா திணறி வந்தது. அப்போது ஜடேஜா சரியான நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை வெற்றிக்கு சற்று அருகில் வரை கொண்டு சென்றார். 59 பந்துகளை சந்தித்த ஜடேஜா 77 ரன்களை விளாசினார். இதனை கண்டு நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் திகைத்துப்போனார்கள். அப்போது அரை சதம் அடித்த பிறகு ஜடேஜா, தனது பேட்டை மஞ்ச்ரேக்கருக்கு எதிராக வாளை சுழற்றுவது போன்று சுழற்றினார்.
கசிந்த உரையாடல்
இந்நிலையில் அப்போது நடந்த சம்பவம் குறித்து ரசிகர் ஒருவருடன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசிய தனிப்பட்ட உரையாடல் வெளியாகியுள்ளது. அதில் அவர், நான் வீரர்களை பற்றி புகழ்ந்து பாடுபவன் அல்ல, அவர்களின் ஆட்டம் குறித்து ஆராய்பவன். நான் ஜடேஜா குறித்து கூறிய வார்த்தைகளுக்கு அவருக்கு அர்த்தம் தெரியாது. ஏனென்றால் ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அவருக்கு யாரோ ஒருவர் விளக்கியிருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
ரசிகர்கள் ஆத்திரம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்களை எடுத்து சாதனைப்படைத்துள்ள அஸ்வினை அனைத்து கால சிறந்த வீரர் என்று கூற முடியாது என மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருந்தது சர்ச்சையை கிளப்பியது. இந்த சூழலில் தற்போது ஜடேஜா குறித்து அவதூறாக பேசியிருப்பது மஞ்ச்ரேக்கர் மீதான ரசிகர்களின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.