மும்பை: சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி போன்ற இந்திய ஜாம்பவான்களை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், சஞ்சய் மஞ்ரேக்கர் தனது கருத்தொன்றை முன்வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் டாப் ஆர்டர் பேட்டிங் செய்வது 'மிகவும் சுலபம்' எனக் குறிப்பிட்ட அவர், உண்மையான பெருமை நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கே உரியது என கூறி இருக்கிறார். இக்கருத்து கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான மஞ்ரேக்கர், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் (ODI) தொடக்க ஆட்டக்காரர்கள் குவிக்கும் ரன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் போக்கை எதிர்த்தார். டெஸ்ட் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுகையில், ஒருநாள் போட்டிகளின் டாப் ஆர்டர் பேட்டிங் 'எளிதானது' என்று அவர் கூறினார். இந்தியாவின் வழக்கமான ஒருநாள் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள மிகவும் 'தீவிரமாக' இருந்ததாகவும், அதேசமயம் டெஸ்டில் 4, 5, 6 ஆம் நிலைகளில் பேட் செய்ய மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து பேசிய அவர், "ஒருநாள் போட்டிகளில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு ஏன் எளிது என்று நான் தொடர்ந்து சொல்கிறேன் என்று பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டில் சில ஆண்டுகளுக்கு முன் திரும்பிப் பார்த்தால், 50 ஓவர் போட்டிகளில் long காலமாய் இந்தியாவுக்காக தொடக்க ஆட்டக்காரர்களாய் ஆடியவர்கள் யார்? அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நடுவரிசை பேட்ஸ்மேன்களாக இருந்தனர்."
"அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராகவோ அல்லது டாப் மூன்று இடங்களிலோ பேட் செய்ய மிகவும் ஆர்வம் காட்டவில்லை. நம்பர் 4, 5, 6 இல் விளையாடுவதில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் இருந்த தலைமுறையில்', சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் தொடக்க வீரர்களாக இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்த மூன்று வீரர்களில் இருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்களிருவரும் அரிதாகவே தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். டெண்டுல்கர் தனது டெஸ்ட் வாழ்க்கையின் பெரும்பகுதியை நான்காம் இடத்திலும், கங்குலி ஐந்தாம் மற்றும் ஆறாம் இடங்களிலும் விளையாடினர்."
"ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு வரும்போது, டாப் மூன்று இடங்களிலும் தொடக்க ஆட்டக்காரராகவும் பேட் செய்ய அவர்கள் கிட்டத்தட்ட தவித்தனர். அங்கேதான் எனது பதிலுள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு எளிது என்று நான் நம்புகிறேன். ஏனெனில் டாப் மூன்று இடங்களுக்குத்தான் அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். 50 ஓவர் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக அல்லது நம்பர் 3 இல் களமிறங்கும்போது, நான்கு ஸ்லிப்களோ அல்லது கல்லியோ இருக்காது. பந்துவீச்சாளர் ஓடி வரும்போது, உங்களை அவுட் செய்ய வருவதில்லை, மாறாக ஓவருக்கு 10-15 ரன்கள் அடிக்க விடாமல் தடுக்கவே வருகிறார் என்பதை நீங்களும் அறிவீர்கள்."
"ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் ஜாம்பவான்களை டாப் ஆர்டரில் காண முடியாது.நீங்கள் போதுமான சிறந்த வீரர் என்றால், முதல் 10 முதல் 15 ஓவர்களைக் கடந்துவிடலாம். பிறகு பீல்ட் விரிவடையும், நீங்கள் பந்துகளை சுழற்றும் திறனுடையவராக இருந்தால், 100 ரன்களை அடையலாம். ஒருநாள் போட்டியில் பேட் செய்ய கடினமான இடம்தான் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா அல்லது எம்.எஸ். தோனி களமிறங்கிய 4, 5, 6 இடங்கள். அவைதான் உண்மையான சவாலான நிலைகள்."
"நீங்கள் ஒரு பேட்டிங் ஜாம்பவானைத் தேடுகிறீர்கள் என்றால், ஒருநாள் போட்டிகளில் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது, குறிப்பாக நம்பர் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று இடங்களில் தேட முடியாது. ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் த்ரீயில் ஆடுபவர்களுக்குச் சாதகமாக நிறைய விஷயங்கள் இருப்பதால், இன்றைய எனது பேட்டிங் ஜாம்பவான்களை நான் தேடும் கடைசி இடம் இதுதான்," என்று திட்டவட்டமாக சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்தார்.