மும்பை: ஆடுகளத்திற்கு ஏற்ப விளையாட வேண்டும் என்று எவ்வளவோ வீரர்கள் கூறியும் சஞ்சு சாம்சன் ஏற்க மறுப்பதாக முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 19 வயதிலேயே அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சஞ்சு சாம்சன். 2015ஆம் ஆண்டே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சன், இதுவரை மொத்தமாகவே 37 போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் எந்த தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டாலும், சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை என்றால் ரசிகர்கள் கடுமையாக விமர்சிப்பார்கள்.

இது கடந்த 4 ஆண்டுகளாகவே தொடர்கதையாகி வருகிறது. அவ்வப்போது சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டாலும், பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்பட மாட்டார். இதுவே சஞ்சு சாம்சனுக்கு அதிக ரசிகர்கள் உருவாகுவதற்கும், செண்டிமெண்டலாக ஒன்றிணைவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
அதேபோல் சஞ்சு சாம்சன் திறமையான பேட்ஸ்மேன் என்றாலும், சீராக ரன்கள் குவிக்க தவறுவதே அவர் மீதான விமர்சனமாக உள்ளது. அதேபோல் ஆடுகளத்திற்கு ஏற்ப பேட்டிங் செய்ய தவறுவதும் அவர் மீதான குற்றச்சாட்டாக அமைந்துள்ளது. அண்மையில் கூட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் இந்திய அணி விக்கெட்டுகளை தவறவிட்ட போதும், களமிறங்கிய உடனே சிக்சர் அடித்து ஆச்சரியம் அளித்தார்.
இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு திமிர் அதிகம் என்று இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் விமர்சித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீசாந்த் அளித்துள்ள பேட்டியில், ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல பேட்டிங் சராசரியை வைத்திருந்தாலும், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படாதது சரியான முடிவு என்றே நினைக்கிறேன்.
ஏனென்றால் சஞ்சு சாம்சனை பற்றி பல்வேறு ஜாம்பவான் வீரர்கள் பெருமையாகவும், பாராட்டவும் செய்திருக்கிறார்கள். ஆனால் சஞ்சு சாம்சன் ஜாம்பவான்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டதே இல்லை. ஒவ்வொரு முறையில் ஆடுகளத்திற்கும், பிட்ச்சிற்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்வோம். ஆனால் சஞ்சு சாம்சன் ஒருநாளும் கேட்டதே இல்லை.
அந்த குணத்தை சஞ்சு சாம்சன் மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போதும் சில நிமிடங்கள் களத்தில் இருக்க அறிவுறுத்துவோம். என்னை பொறுத்தவரை சஞ்சு சாம்சனுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவரிடம் கன்சிஸ்டன்ஸி இல்லை என்று விமர்சித்துள்ளார்.