பிரிட்ஜ் டவுன் : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பெரும் தலைவலியாக இருப்பது விக்கெட் கீப்பராக யாரை சேர்ப்பது என்பது தான்.
உலகக்கோப்பை தொடர் இன்னும் மூன்று மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ரிஷப் பன்ட் விளையாடுவது சந்தேகமாக தான் இருக்கிறது.
இதனால் அடுத்த விக்கெட் கீப்பர் யார் என்பதை இந்திய அணி தேர்வு செய்ய வேண்டும். அதற்கான விடையை தேடும் பணியில் இன்று முதல் இந்திய அணி தொடங்க உள்ளது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்வது என்பது பற்றி குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அணியில் தற்போது எடுக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் சஞ்சு சாம்சன் தனி ஆளாக நின்று பட்டையை கிளப்பி இருக்கிறார். இதனால் நடுவரிசையில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவதே சரியாக இருக்கும் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்து.
ஆனால் ரோகித் சர்மாவின் செல்ல பிள்ளையாக இஷான் கிஷன் இருக்கிறார். மேலும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்திருக்கிறார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரை சதமும் இசான் கிஷன் அடித்துள்ளார். இதனால் சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனுக்கு தான் ரோகித் சர்மா முன்னுரிமை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இஷான் கிஷனுக்கு தொடக்க இடம் தவிர வேறு எதுவும் சரியாக இருக்காது.
தொடக்கத்தில் ஏற்கனவே கில் இருப்பதால் அந்த இடத்தை நிரப்ப முடியாது. இதனால் நடு வரிசையில் விளையாடும் திறமை உடைய சஞ்சு சம்சனுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் உட்கார வைக்கப்பட்டால் கேரளாவில் பந்து அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.