ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ராஜஸ்தான் அணி இன்று படுமோசமாக விளையாடி தோல்வி தழுவி இருக்கிறது. பெங்களூர் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான அணி விளையாடியது.
இதில் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க ராஜஸ்தான் அணி, 59 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் ஆர்சிபி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் சஞ்சு சாம்சன், நாங்கள் எப்போதும் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்போம். டாப் 3 வீரர்கள் இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்திருக்கிறோம். ஆனால் இன்று அப்படி ஏதும் நடக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் ஏன் தோல்வியை தழுவினோம் என்பது குறித்து ஆராய வேண்டும். ஆனால் அதற்கான காரணங்களை என்னால் இப்போது சொல்ல முடியாது.
டி20 கிரிக்கெட்டின் இயற்கையே இதுதான். இரண்டு நாள் முன்பு தான் பெரிய வெற்றியை பெற்றோம். ஆனால் இன்று அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது. இன்று ஆடுகளம் தோய்வு அடையும் என்று தெரியும். இதனால் பவர் பிளேவில் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் ஏதும் கைகூடவில்லை.
ஆர் சி பி பந்துவீச்சாளர்களுக்கும் அந்த அணி வீரர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் அவர்கள் விளையாடினார்கள். இன்றைய ஆட்டம் இறுதிக் கட்டம் வரை சென்று பரபரப்பாக முடியும் என்று நினைத்தேன். ஏனென்றால் ஆர் சி பி நிர்ணயித்த இலக்கு இந்த ஆடுகளத்தில் சராசரியானது தான்.
எங்களுடைய ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகம் ஏன் இவ்வளவு மோசமாக ஆனது என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை. இதனால் இந்த கேள்விக்கு என்னிடம் பதில் சுத்தமாக இல்லை. நானே நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்து கொண்டு இருக்கிறேன். எனினும் நாம் மனதளவில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும். நம்பிக்கை உடன் கடைசி வரை இருந்து வெற்றிக்காக போராட வேண்டும். ஒரு அணியாக வீரர்கள் பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டும் என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.