மும்பை : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.
உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

ரிஷப் பண்ட் அணியில் இல்லாத நிலையில் இந்திய அணி நடுவரிசையில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனை தேடி வருகிறது. இந்த நிலையில் நடப்பு தொடரில் இஷான் கிஷன் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். ஆனால் அவர் தொடக்க வீரராக விளையாடி வருகிறார். இந்தியாவுக்கு நடு வரிசையில் தான் இடம் தேவைப்படுவதால், சஞ்சு சாம்சனை அந்த இடத்தில் பயன்படுத்த ராகுல் டிராவிட் யோசித்து வந்தார்.
எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால், இந்த போட்டிக்கு முன்பு ரோகித் சர்மா சாம்சனை அழைத்து தனியாக பேசி ஆலோசனைகளை வழங்கினார்.இது இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பிரதிபலித்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. இதில் சிறப்பாக விளையாடிய இசான் கிஷன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தது. இசான் கிஷன் 77 ரன்களில் ஆட்டம் இழக்க சிஎஸ்கே வீரர் ருத்ராஜ் 8 ரன்களில் வெளியேறினார்.
அபாரமாக விளையாடிய கில் 85 ரன்கள் எடுத்தார். இந்த இடத்தில் நான்காவது வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் எடுத்தவுடனே அதிரடியை காட்ட ஆரம்பித்தார். தான் சந்தித்த இரண்டாவது பந்திலே சிக்சர் அடித்த சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை பதற வைத்தார். 39 பந்துகளில் சாம்சன் அரை சதம் அடித்து அசத்தினார். இதனால் சஞ்சு சம்சன் இன்றைய ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
எனினும் 41 பந்துகளை எதிர் கொண்ட சாம்சன் 51 ரன்களில் வெளியேறினார். இதில் நான்கு இமாலய சிக்சர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். நடு வரிசையில் எப்போதுமே வீரர்கள் மெதுவாக விளையாடுவார்கள். ஆனால் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி இந்திய அணியை 300 ரன்களுக்கு மேல் அடிக்கும் வகையில் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.இந்த இன்னிங்ஸ் மூலம் சஞ்சு சாம்சன் தேர்வு குழுவினரின் கவனத்தையும் ஈட்டிருக்கிறார்.