கவுகாத்தி: இன்று நடக்கவுள்ள 8வது ஐபிஎல் போட்டியில் வலிமையான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாட உள்ளது. இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இன்றையப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று நடக்கவுள்ள 8வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடுகிறது. அசாம் மாநிலத்தை மையமாக வைத்து ஐபிஎல் அணி இல்லையென்றாலும், இது ராஜஸ்தான் அணிக்கான உள்ளூர் ஆட்டமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரியான் பராக்கிற்கு உள்ளூர் ரசிகர்கள் அதிகளவில் ஆதரவு அளிப்பார்கள்.

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால், கேரளாவிலும் ராஜஸ்தான் அணிக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஐதராபாத் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது . எப்போதும் போல் பட்லர், ஜெய்ஷ்வால் அபாரமான ஃபார்மில் இருக்கிறார்கள். சஞ்சு சாம்சன் ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலும் அசாத்திய ஃபார்மில் இருப்பார். அதனை இம்முறையும் தொடர்ந்து வருகிறார்.
இவரோடு படிக்கல், ஹெட்மயர், ரியான் பராக், ஹோல்டர், அஸ்வின் என்று பெரிய பேட்டிங் வரிசையை ராஜஸ்தான் அணி கொண்டுள்ளது. அதேபோல், கவுகாத்தி பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால், நிச்சயம் ராஜஸ்தான் அணியில் நவ்தீப் சைனி அல்லது குல்தீப் சென் இடம்பெற அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது. முதல் பேட்டிங் ஆடினால், இம்பேக்ட் பிளேயராக இருவரில் ஒருவர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் மழை பெய்ததன் காரணமாக 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஷிகர் தவான், ராகபக்சே, ஜித்தேஷ் சர்மா, சிக்கந்தர் ராசா, சாம் கரண் உள்ளிட்டோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலேயே இது சிறியளவு வெளியில் வந்தாலும், ராஜஸ்தான் போன்ற வலுவான பவுலிங் வைத்துள்ள அணிக்கு எதிரான பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் நாதன் எல்லீஸ், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் பந்துவீச்சிலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இதனால் இம்பேக்ட் பிளேயர் விதியால் இன்னொரு பந்துவீச்சாளரையே பஞ்சாப் அணியும் களமிறக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. முதல் போட்டியில் வென்ற இரு அணிகளும் மோதிக் கொள்வதால், இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ராஜஸ்தான் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக உள்ளூர் போட்டியில் ஆடுவதால், வெற்றிபெற தீவிர முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.