ஹைதராபாத்: மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ஐபிஎல் தொடரை ராஜஸ்தான் அணி வெற்றியுடன் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 3ஆம் நாளான இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. மாலை 3.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்கும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடுகிறது.

கடந்த ஆண்டு 8வது இடத்துக்கு தள்ளப்பட்ட ஹைதராபாத் அணி இந்த சீசனுக்கான அணியில் பல மாற்றங்களை செய்து புதிய அணியாக களம் இறங்குகிறது. கடந்த ஆண்டு கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சனை கழற்றிவிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரில் கோப்பையை வென்று கொடுத்த எய்டன் மார்க்ரம் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்து ஆடி வரும் மார்க்ரம், மார்கோ ஜேன்சன், ஹென்ரிக் கிளாசன் ஆகியோர் இந்த ஆட்டத்தில் விளையாட மாட்டார்கள்.
இதனால் ஹைதராபாத் அணி பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த மூன்று வீரர்களும் அடுத்த போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைய உள்ளனர்.
மார்க்ரம் இல்லாத சூழலில், ஹைதராபாத் அணியை புவனேஷ்வர் குமார் வழிநடத்த உள்ளார். ரூ.13 கோடிக்கு வாங்கப்பட்ட ஹாரி புரூக்ஸ், கிளென் பிலிப்ஸ், அடில் ரஷித், நடராஜன், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி கடந்த ஆண்டு 2வது இடம் பிடித்தது. ஏற்கனவே அதீத பலத்துடன் உள்ள ராஜஸ்தான் அணியில் ஜோ ரூட், ஜேசன் ஜோல்டர் உள்ளிட்ட இணைந்துள்ளனர். இதனால் காயமடைந்த பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்கும் வீரரை தேர்வு செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.
அதேபோல் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், ஜெய்ஸ்வால், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர், ஆர்.அஸ்வின், ஆடம் ஜம்பா, நவ்தீப் சைனி உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வருவதால், இந்திய அணியில் இடம்பிடிக்க சஞ்சு சாம்சனுக்கு சிறந்த ஐபிஎல் தொடராக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

இதுவரை இந்த இரு அணிகளும் விளையாடியுள்ள 16 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 8 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கின்றன. நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்று இரு அணிகளும் தீவிரமாக இருப்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.