டிரிண்டாட் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் அதிவேகமாக அரை சதம் அடித்து சிறப்பான கம்பேக்கை கொடுத்திருக்கிறார்.
இதன் மூலம் சஞ்சு சாம்சன் நடுவரிசையில் தன்னுடைய இடத்தை உறுதி செய்து விட்டார் என ரசிகர்கள் நம்புகின்றனர். இதைப்போன்ற ஒரு ஆட்டத்தை ஆசிய கோப்பையிலும் சஞ்து சாம்சன் வெளிப்படுத்தினால் நிச்சயம் உலகக்கோப்பை தொடரில் இருப்பார்.

இந்த நிலையில் அரை சதம் அடித்த பிறகு பேசிய சாம்சன், போட்டியில் சில நேரம் செலவழித்து ரன்கள் சேர்த்தது மகிழ்ச்சியை கொடுப்பதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் எப்போதுமே நாட்டிற்காக ரன்கள் சேர்ப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று நான் அதிரடியாக விளையாட ஏற்கனவே முடிவு செய்துவிட்டு தான் களத்திற்கே வந்தேன். எந்த பவுலர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே திட்டம் தீட்டி வைத்திருந்தேன்.
நான் என் கால்களை பயன்படுத்தி இறங்கி வந்து அடித்து பந்துவீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என எண்ணினேன். பேட்டிங் வரிசையில் அடிக்கடி மாறுவது சவால் அளிக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த சாம்சன், இந்திய கிரிக்கெட் வீரராக இருப்பதே ஒரு பெரிய சவால்தான். நான் வெவ்வேறு பேட்டிங் வரிசையில் விளையாடி இருக்கிறேன். அதற்கு தகுந்தார் போல் என்னை நான் தயார்படுத்திக் கொள்கிறேன் என்று பதில் அளித்தார். ஆடுகளம் குறித்து கேள்விக்கு பேசிய சஞ்சு சாம்சன் பார்பிடாஸ் ஆடுகளம் கொஞ்சம் ஈரப்பதமாக இருந்தது.
ஆனால் இந்த ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருந்தது.பந்து நன்றாக பேட்டிற்கு வந்தது. எனினும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கொஞ்சம் கடினம்தான். எனவே இது போன்ற சூழலில் ரன்கள் சேர்ப்பது கடினம். இந்த ஆட்டத்தில் நடு வரிசை பேட்டர்கள் அனைவருமே சிறப்பாக விளையாடினார்கள். அவர்களுக்கு இந்த பாராட்டு நிச்சயம் போய் சேர வேண்டும். களத்தில் செலவழித்து ரன்களை சேர்த்து விளையாடினோம். 350 ரன்களை நாங்கள் தற்காத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.