லக்னோ : ஐபிஎல் தொடரில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெய்ப்பூரில் முதல் முறையாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 155 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்ட முடியாத ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவி இருக்கிறது.
முதல் 11 ஓவரில் 81 ரன்களை அடித்த ராஜஸ்தான் அணி, அதன்பிறகு 12 முதல் 17 வது ஓவர் வரை 32 ரன்களை மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், தோல்வி அடைந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஆனால் பரவாயில்லை. எங்களுடைய முதல் போட்டியில் ஜெய்ப்பூரில் வெல்ல வேண்டும் என நினைத்தோம். இந்த ஆட்டத்தின் மூலம் நாங்கள் பல பாடங்களை கற்றுக்கொண்டு அடுத்த போட்டி நோக்கி செல்ல வேண்டும் என நினைக்கிறேன்.
இதுபோன்ற பலமான பேட்டிங் வரிசையை வைத்துக்கொண்டு இந்த இலக்கை எட்ட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. லக்னோ வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்தது. இதை நான் ஆரம்பத்திலேயே எதிர்பார்த்தேன். இது போன்ற ஆடுகளத்தில் கொஞ்சம் அறிவுப்பூர்வமாக விளையாட வேண்டும்.
முதல் ஒன்பது ஓவர் வரை நாங்கள் அப்படித்தான் விளையாடினோம். ஆனால் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்த பிறகு ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தால் கூட வெற்றி பெற்று இருக்கலாம். நாங்கள் அதிரடியாக ஆட முயற்சி செய்யும் போதெல்லாம் விக்கெட்டுகளை இழந்தோம். இந்த ஆடுகளத்தில் 30 பந்துகளின் 50 ரன்கள் எட்ட வேண்டும் என்பது கொஞ்சம் கடினமான காரியம்.
வெற்றியோ தோல்வியோ அதிலிருந்து நாம் பாடத்தை எடுத்துக் கொள்வதை கிரிக்கெட்டின் சிறப்பு. நாங்கள் பந்துவீச்சின் சிறப்பாக செயல்பட்டு லக்னோ அணியை 154 ரன்களில் சுருட்டினோம். நான் எங்கள் வீரர்களிடமிருந்து இன்னும் சிறப்பான செயல்பாட்டை எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் நாம் எந்த அளவுக்கு நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அடுத்த போட்டியில் இதை சரி செய்வோம் என நம்புகிறேன் என சஞ்சு சம்சன் கூறியுள்ளார்.