சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வமாக இருப்பதாக, அந்த அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றிற்குத் தகவல் தெரிவித்துள்ளார். இது ஐபிஎல் அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த வீரரையும் அணி மாற்றம் செய்யாத ஒரு அணியாக சிஎஸ்கே உள்ளது. அதை உடைத்து முதன்முறையாக சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்குமா? என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நீண்ட காலமாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தொடரில் அவர் பலமுறை காயமடைந்திருந்தார். அதனால் பல போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அவர் விளையாடிய போட்டிகளிலும் பெரிதாக ரன் குவிக்கவில்லை. இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற உள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
அதை நிரூபிக்கும் வகையில், அவர் அமெரிக்காவில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டிகளின் போது நேரில் சென்று பங்கேற்றார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தினருடன் அவர் நெருக்கமாக இருந்தார். இதன் மூலம் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற உள்ளது பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டது.
எனினும், சிஎஸ்கே இதுவரை எந்த ஒரு வீரரையும் அணி மாற்றம் செய்து வாங்கியதில்லை என்பதால், இது இந்த மாற்றம் சாத்தியமா என்ற சந்தேகமும் இருந்தது. இந்த நிலையில் தான், கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள பெயர் வெளியிட விரும்பாத சிஎஸ்கே அதிகாரி ஒருவர், தாங்கள் சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் இன்னும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இது தொடர்பாக அணுகவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு சிஎஸ்கே மட்டுமே அன்றி மேலும் இரண்டு அணிகள் ஆர்வமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை வாங்குவதாக இருந்தால், தங்கள் அணியில் இருக்கும் வேறு சில வீரர்களை அணிமாற்றம் செய்ய வேண்டி இருக்கும். அப்படி எந்தெந்த வீரர்களை சிஎஸ்கே அணி விட்டுக் கொடுக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.