ஐதராபாத்: ரஞ்சி கோப்பை தொடரில் சர்பராஸ் கான் மும்பை அணிக்காக மீண்டும் ஒரு சிறப்பான இரட்டை சதத்தை அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம், இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலையில், தனது திறமையை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார். ஹைதராபாத்திற்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டியில், மும்பை அணியில் ஐந்தாவது வீரராக களமிறங்கி, அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சர்பராஸ் கான் தனது இந்த அசத்தலான இன்னிங்ஸில் 19 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களை விளாசி, மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்தைப் பறக்கவிட்டார். இதில், நட்சத்திர இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் 39 பந்துகளில் மட்டும் 45 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி ஆட்டம் மூலம் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருக்கு தாம் இன்னும் இங்கு தான் இருக்கிறேன் என்பதை காட்டியுள்ளார்.

இது சர்பராஸின் 100 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட 17வது முறை ஆகும். 2019 சீசனுக்குப் பிறகு, இத்தகைய சாதனையை பலமுறை நிகழ்த்திய மூன்றாவது வீரர் சர்பராஸ் கான் தான். பல காயங்களால் தொடர்ந்து அவதிப்பட்ட போதிலும், அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் அவர் தொடர்ந்து அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விஜய் ஹசாரே டிராபியில் கூட மும்பை அணிக்காக அவரே அதிக ரன்கள் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 219 பந்துகளில் 227 ரன்களை சர்ஃபராஸ் கான் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் மும்பை அணி முதல் இன்னிங்சில் 560 ரன்களை குவித்தது.
கடைசியாக 2024-ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய சர்பராஸ், அந்தத் தொடரில் 150 ரன்கள் எடுத்து தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். துரதிர்ஷ்டவசமாக, அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து , மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் அவர் இடம்பெறவில்லை.
சர்பராஸ் கான் தொடர்ந்து அபாரமாக விளையாடினாலும், அவருக்கு அணியில் இடம் தரப்பட வில்லை. இதற்கு காரணம் தேர்வுக்குழு ஆல்ரவுண்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் தவறான கொள்கையே காரணம். இதே போன்று சர்பராஸ் கான், அணியில் நடக்கும் விசயத்தை செய்தியாளர்களிடம் கசிய விட்டதாக கம்பீர் அவர் மீது குற்றம்சாட்டி ஓரங்கட்டினார்.
சர்ஃபராஸ் குறித்து பேசிய முன்னாள் இந்தியத் தேர்வுக்குழு உறுப்பினர் திலீப் வெங்சர்க்கர், ச"அவர் இந்தியாவிற்காக எந்த வடிவத்திலும் தேர்வு செய்யப்படாதது எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், இந்திய அணிக்காகவும் சரி, மற்ற போட்டிகளிலும் சரி, அவர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்," என்று தெரிவித்தார்.
"2024 மார்ச்சில் தர்மசாலாவில் இங்கிலாந்துக்கு எதிராக அவரும் தேவ்தத் படிக்கலும் இணைந்து பேட்டிங் செய்வதைப் பார்த்தேன். அது ஒரு முக்கியமான செஷன். அவர்கள் அருமையாக விளையாடி ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர், அது இறுதியில் இந்தியா டெஸ்ட் போட்டியை வெல்ல உதவியது."
"அதன் பிறகும் அவருக்கு மற்றொரு டெஸ்ட் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்தபோதும்கூட, அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது, இது என்னை மிகவும் குழப்பமடையச் செய்கிறது. அவர் அனைத்து வடிவங்களிலும் விளையாடுவதற்கு போதுமான திறமையான வீரர். இத்தகைய ஒரு திறமை புறக்கணிக்கப்பட்டு கைவிடப்பட்டது உண்மையாகவே வெட்கக்கேடானது" என்றும் கூறினார்.