மும்பை : ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கான் இரட்டை சதம் விளாசியிருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் ஒரே வீட்டில் இருந்து அண்ணன், தம்பி தேசிய அணிக்காக விளையாடுவது சாதாரண விஷயம் தான். இந்திய கிரிக்கெட்டில் கூட இர்ஃபான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள் இணைந்து விளையாடியுள்ளனர். அதேபோல் இப்போதும் கூட ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா இருவரும் விளையாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக யு19 அணியிலும் ஒரு சம்பவம் நடைபெற்றது.

இந்திய அணிக்காக ஆடி வரும் சர்பராஸ் கான் மற்றும் அவரின் தம்பி முஷீர் கான் இருவரும் யு19 அணிக்காக விளையாடியுள்ளனர். அண்மையில் முடிந்த யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய முஷீர் கான், 2 சதங்கள் உட்பட 360 ரன்களை விளாசி தள்ளினார். இந்த நிலையில் ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணிக்காக ஆடவிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி நேரத்தில் விலகினார்.
இதனால் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாட முஷீர் கானுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் நாக் அவுட் போட்டியில் வலிமை வாய்ந்த பரோடா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 140.4 ஓவர்களில் 384 ரன்கள் குவித்து ஆல் அவுட்டாகியது. இதில் அதிகபட்சமாக அறிமுக வீரரான முஷீர் கான் இரட்டை சதம் விளாசி கடைசி வரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.
சிறப்பாக விளையாடிய அவர் 357 பந்துகளில் 18 பவுண்டரிகள் உட்பட 203 ரன்களை விளாசி இருக்கிறார். மற்ற பேட்ஸ்மேன்களில் ஹர்திக் தாமூர் மட்டும் 57 ரன்களை சேர்த்தார். கிட்டத்த மும்பை அணியின் முதல் இன்னிங்ஸில் ஸ்கோரி பாதிக்கும் அதிக ரன்களை முஷீர் கான் விளாசி இருக்கிறார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
99 ரன்களுக்கு மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, முஷீர் கான் - ஹர்திக் தாமூர் கூட்டணி இணைந்து மீட்டெடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஞ்சி டிராபி தொடரின் அறிமுக போட்டியிலேயே மும்பை அணிக்காக களமிறங்கிய இரட்டை சதம் விளாசியதன் மூலம் முஷீர் கான் சாதனை படைத்துள்ளார். இதற்கு வாசிம் ஜாபர் மட்டுமே மும்பை அணிக்காக அறிமுக போட்டியில் இரட்டை சதம் விளாசியவர். இதனால் பலரும் அண்ணன் - தம்பி இருவரும் விரைவில் இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடுவார்கள் என்று பாராட்டி வருகின்றனர்.