சவுதியில் நடைபெறுகிறது ஐபிஎல் போட்டி.. பிசிசிஐக்கு கோடிகளை காட்டி ஆசை.. விரைவில் வரும் மாற்றம்
மும்பை : உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சவுதி தற்போது சுற்றுலாத்துறையில் அதிக கவனத்தைக் காட்டி வருகிறது. ஐபிஎல் தொடரில் முக்கிய ஸ்பான்சர் ஆகவும் சவுதி சுற்றுலாத்துறை இருக்கிறது.
இந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கிரிக்கெட் போட்டிகளை சவுதியில் நடத்த அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது. ஏற்கனவே கால்பந்து வீரர் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்து கால்பந்து ஆட்டங்களை சவுதி மிகப் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது.

தற்போது கிரிக்கெட்டையும் அதே வகையில் நடத்த சவுதி முயற்சிக்கிறது. இதற்காக பிசிசிஐயின் உதவியை சவுதி நாடியுள்ளது. அதன்படி ஐபிஎல் பாணியில் மினி ஐபிஎல் என்ற ஒரு தொடரை பிசிசிஐயிடம் இணைந்து நடத்த சவுதி அரசு கேட்டுள்ளது. இதன் மூலம் சவுதிக்கு அதிக வெளிநாட்டு பயணிகள் வருவார்கள் என அந்த அரசு திட்டம் போட்டுள்ளது.
ஏற்கனவே மினி ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐயும் முயற்சி செய்து வருகிறது. இதற்காக செப்டம்பர் மாதத்தை குறிவைத்து மினி ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என பிசிசிஐ முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனை சவுதியில் நடத்தினால் அது கிரிக்கெட்டை மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தும் வகையில் இருக்கும் என யோசிக்கப்படுகிறது.

மினி ஐபிஎல் போட்டியை சவுதியில் நடத்த பிசிசிஐ ஒத்துக் கொள்ளவில்லை என்றால் புதியதாக ஒரு கிரிக்கெட் தொடரை உருவாக்கி அதில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிக்குமாறு சவுதி கூறியுள்ளது. இதற்கு பிசிசிஐ அனுமதி அளிக்கவில்லை என்றால் ரொனால்டோ பாணியில் கோடிகளை காட்டி பல முக்கிய வீரர்களை தங்களது தொடரில் விளையாட ஒப்பந்தம் போட சவுதி முடிவு எடுத்துள்ளது. இதனால் கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் மாற உள்ளது.


Click it and Unblock the Notifications