டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக என்.சீனிவாசன் பதவியேற்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் ஐபிஎல் பிக்சிங் தொடர்பாக விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளின் போது பிக்சிங், பெட்டிங் ஈடுபட்டதாக வீரர்கள், புக்கிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகனான குருநாத் மெய்யப்பனும் ஒருவர். இதனால் சீனிவாசனுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சீனிவாசன் பதவியிலிருந்து விலகாமல் ஒதுங்கிக் கொண்டார். டால்மியா தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் சீனிவாசனின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பாக பீகார் கிரிக்கெட் சங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது.

அதில் சீனிவாசன் தலைவர் பதவிக்கு போட்டியிட தடை கோரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றமோ சீனிவாசன் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் அப்படி போட்டியிட்டு வென்றால் மறு உத்தரவு வரும் வரை தலைவர் பதவியை ஏற்கக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. இதன் பின்னர் தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் ஒருமனதாக சீனிவாசனே தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தலைவர் பதவியை ஏற்கவில்லை. இந்நிலையில் நேற்று இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஐபிஎல் பிக்சிங் குறித்து விசாரிக்க மூவர் குழுவை நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.
அத்துடன் இது தொடர்பான நிலைப்பாட்டை இன்று தெரிவிக்குமாறு கிரிக்கெட் வாரியம், பீகார் கிரிக்கெட் சங்கத்துக்கு நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டது. இரு தரப்பு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் இன்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இருதரப்பு மனுக்களை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், பஞ்சாப் முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான மூவர் குழு, ஐபிஎல் பிக்சிங் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்யும் என்று அறிவித்தது. அத்துடன் தலைவர் பதவியை சீனிவாசன் ஏற்கலாம் என்றும் ஆனால் மூவர் குழுவின் விசாரணையில் எந்தவகையிலும் அவர் தலையிடக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான குழு 4 மாதத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.