6 வீரர்களை விடுவித்த சிஎஸ்கே
ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் 15ம் தேதியையொட்டி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி 8 ஐபிஎல் அணிகளும் தங்களது அணிகளில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்பட உள்ள வீரர்களை அறிவித்தது. கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், பியூஷ் சாவ்லா, முரளி விஜய் மற்றும் மோனு சிங் ஆகிய வீரர்களை சிஎஸ்கே விடுவித்துள்ளது.
முன்னாள் வீரர் ஆதங்கம்
இந்நிலையில் 6 முக்கிய வீரர்களை விடுவித்துள்ளதன் மூலம் சிஎஸ்கே மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளதாக முன்னாள் நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே விடுவித்துள்ள வீரர்கள் அனைவரும் வயது அதிகமானவர்களாக இருந்தாலும் அவர்களை கொண்டே கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டதை மறக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏலத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும்
அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாக சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி முன்னதாக தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர், ஆனால் அது எப்படி நடக்க இருக்கிறது என்பது குறித்து தெரியவில்லை என்றும் ஐபிஎல் ஏலத்தின்போது சிஎஸ்கே சிறப்பாக செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
பர்சில் ரூ.22.9 கோடி
டாடிஸ் ஆர்மி என்ற பட்டப்பெயருடன் அனுபவ வீரர்களை கொண்டு செயல்பட்டுவந்த சிஎஸ்கே, கடந்த தொடரின் மோசமான தோல்வியை அடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் தீர்மானத்தை எடுத்துள்ளது. இதையடுத்து முக்கிய வீரர்களை அந்த அணி விடுவித்து அதன்மூலம் 22.9 கோடி ரூபாயை வசப்படுத்தியுள்ளது.