
மும்பைக்கு எதிராக மொத்து
ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில், சென்னைக்கு எதிராக அரைசதம் அடித்து விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 12 ரன்களில் கோல்டர் நைல் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். பிறகு, மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களில் பும்ரா ஓவரில் எல்பிடபிள்யூ ஆக, 'இதோ வந்துட்டேன்' என்று கேப்டன் சஞ்சு சாம்சன் வெறும் 3 ரன்களில் கேட்ச் கொடுத்து அவசர அவசரமாக நடையைக் கட்டினார். 41 ரன்களுக்கெல்லாம் அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பிறகு டூபேவும் 3 ரன்களில் அவுட்டாக, நான்காவது விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். சென்னையை வெளுத்த அத்தனை வீரர்களும் 10 ஓவர்களுக்குள் அவுட்டாகி வெளியேறினார்கள். இதன் பிறகு, ராஜஸ்தான் அணியால் கடைசி வரை மீண்டு வர முடியவில்லை. க்ளென் ஃபிலிப்ஸ் வெறும் 4 ரன்களில், கோல்டர் நைல் ஓவரில் போல்டாக, ராஜஸ்தான் 50 ரன்களுக்கெல்லாம் ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. அதவாது, 13 ஓவர்களுக்கு அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.

மிக குறைவான ஸ்கோர்
பிறகு நீஷம் வீசிய ஒரு அற்புதமான ஷாட் பந்தில், 20 ரன்களில் 12 ரன்கள் எடுத்திருந்த தெவாட்டியா கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் ஷ்ரேயாஸ் கோபால், பும்ரா ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே எட்ஜ் அகி தலையை தொங்கப் போட்டுச் சென்றார். கடைசி நம்பிக்கையாய் இருந்த டேவிட் மில்லர் 15 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். 5.1வது ஓவருக்கு பிறகு, ராஜஸ்தான் அணியால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. அதன் பிறகு 18.2வது ஓவரில் ஒரு எட்ஜ் காரணமாக பவுண்டரி கிடைத்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. முடிவில், ராஜஸ்தான் 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து வெறும் 90 ரன்களே எடுத்தது.

வெடித்த இஷான் கிஷன்
இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணியில், ரோஹித் ஷர்மா தொடக்கம் முதலே பந்துகளை விளாச தொடங்கினார். ஏனெனில், 10 ஓவர்களுக்குள் போட்டியை முடித்தால், ரன்ரேட், -0.11 என்று அதிகரித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொள்ள இந்த போட்டியை மும்பை பயன்படுத்த நினைத்தது. இதனால், அதிரடி காட்டிய ரோஹித் 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில், 2 சிக்ஸர்களும், 1 பவுண்டரியும் அடங்கும். பிறகு, சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் கேட்ச்சாக, 56 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது மும்பை. எனினும், மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளாக வெளியே உட்கார வைக்கப்பட்டிருந்த இஷான் கிஷன், இன்று பழைய பன்னீர் செல்வமாய் வெடித்துத் தள்ளினார். இதனால், 8.2வது ஓவரிலே 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இஷான் கிஷன் 25 பந்துகளில் அரைசதம் விளாசி அட்டகாசமாக விளையாடினார். இந்த அபார வெற்றியின் காரணமாக, மும்பை இந்தியன்ஸ் அணி இன்னமும் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது. காரணம், இப்போது அவர்களது ரன் ரேட் -0.048.

இஷான் கம்பேக் காரணம்
இப்போட்டி முடிந்த பிறகு பேசிய இஷான் கிஷன், "ஏற்ற தாழ்வுகள் என்பது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையின் பெரும் பகுதியாகும். நான் எனது ஃபார்ம் குறித்து விராட், ஹர்திக், பொல்லார்ட்டுடன் விவாதித்தேன். அது எனக்கு நம்பிக்கையை அளித்தது. நாம் செய்ய வேண்டியது அடுத்த போட்டிக்கு தயாராக இருக்க வேண்டும். அன்றைய தினம் பேராற்றலுடன் விளையாட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். உண்மையில், இஷான் கிஷன் ஃபார்முக்கு திரும்பியிருப்பது கேப்டன் விராட் கோலிக்கு பெரும் நிம்மதியை கொடுத்திருக்கும். காரணம், இஷான் மற்றும் சூர்யகுமாரின் பெர்ஃபாமன்ஸ் ஐபிஎல் தொடரில் மைனஸுக்கு சென்றுவிட்டது. இருவரும் சுத்தமாக ஃபார்மில் இல்லை. இருவருமே இம்மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றிருந்தனர். இதனால், கடந்த இரு போட்டிகளாக இஷான் கிஷன் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இப்போது மீண்டும் அவர் ஃபார்முக்கு வந்திருப்பது மும்பை அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் ஒரு கிஃப்ட் என்றால் அது மிகையாகாது.


Click it and Unblock the Notifications











