மும்பை: "இந்திய அணியின் அதிரடி மன்னன்" என்று வர்ணிக்கப்படும் வீரேந்திர சேவாக், சமீபத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசுகையில் சச்சின் டெண்டுல்கர் எவ்வாறு தனது ஓய்வு முடிவை தடுத்து நிறுத்தினார் என்பது குறித்து கூறி இருக்கிறார்.
2008ஆம் ஆண்டிலேயே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்ததாகவும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஒரே ஒரு அறிவுரையால் அந்த முடிவைக் கைவிட்டதாகவும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைப் பற்றி சேவாக் மனம் திறந்துள்ளார். குறிப்பாக, 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரின்போது, அப்போதைய கேப்டன் எம்.எஸ்.தோனி தன்னை அணியில் இருந்து நீக்கியதால், ஓய்வு முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.
இதுபற்றி சேவாக் கூறுகையில், "2007-08 ஆஸ்திரேலியா தொடரில், முதல் மூன்று போட்டிகளில் ஆடிய பிறகு, எம்.எஸ்.தோனி என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டார். அதன் பிறகு எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ப்ளேயிங் லெவனில் இடமே இல்லை என்றால், பிறகு எதற்காக ஒருநாள் போட்டிகளில் நீடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்," என்று அந்த வேதனையான தருணத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
மனமுடைந்து ஓய்வு முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சேவாக், தனது இந்த முடிவை கிரிக்கெட் சச்சின் டெண்டுல்கரிடம் பகிர்ந்துள்ளார். அந்த உரையாடல்தான் சேவாக்கின் கிரிக்கெட் வாழ்க்கையையே மாற்றியமைத்தது.
சச்சின் தன்னிடம் கூறியதை சேவாக் விவரிக்கையில், "நான் சச்சினிடம் சென்று, 'ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என்று நினைக்கிறேன்' என்றேன். அதற்கு அவர், 'வேண்டாம். 1999-2000 காலகட்டத்தில் எனக்கும் இதே போன்ற ஒரு நிலைமை வந்தது. கிரிக்கெட்டையே விட்டுவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அந்த மோசமான காலகட்டம் கடந்துபோனது. இப்போது நீயும் ஒரு கடினமான சூழலில் இருக்கிறாய். இதுவும் கடந்து போகும். ஒருபோதும் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதே. உனக்கு நீயே கொஞ்சம் அவகாசம் கொடு, ஒரு இரண்டு தொடர்கள் வரை காத்திரு. அதன்பிறகு ஒரு முடிவை எடு' என்று அறிவுரை கூறினார்," எனத் தெரிவித்துள்ளார்.
சச்சினின் இந்த வார்த்தைகள் சேவாக்கிற்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. ஓய்வு பெறும் முடிவைக் கைவிட்டு, மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பிய சேவாக், அடுத்தடுத்த தொடர்களில் ரன் மழை பொழிந்தார். இதன் உச்சகட்டமாக, 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதில் சேவாக்கின் பங்கு அளப்பரியது.
ஒருவேளை, அன்று சச்சின் அந்த அறிவுரையைக் கூறாமல் இருந்திருந்தால், இந்திய கிரிக்கெட் ஒரு மாபெரும் அதிரடி வீரரை முன்கூட்டியே இழந்திருக்கும். இந்தச் சம்பவம், தோனிக்கும் சேவாக்கிற்கும் இடையே இருந்ததாகக் கூறப்படும் கருத்து வேறுபாடுகளை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இருப்பினும், சச்சினின் தலையீடு ஒரு வீரரின் வாழ்க்கையை மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் ஒரு முக்கிய அத்தியாயத்தையே காப்பாற்றியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.