இந்தூர்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சுயநலமாகவும், சொந்த சாதனைகளுக்காகவும் விளையாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல், இந்திய வீரர்கள் சுயநலவாதிகள். 100 ரன்களுக்கு அருகில் சென்றால் சொந்த சாதனைகளுக்காக விளையாட தொடங்கிவிடுவார்கள் என்று காட்டமாக விமர்சித்திருப்பார். அந்த விமர்சனங்கள் அப்பட்டமான உண்மை என்றாலும், அப்போது சர்ச்சையாகியது. இதனால் இந்திய ரசிகர்கள் மேக்ஸ்வெல்லை காட்டமாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சதம் விளாசுவதற்காக சுயநலமாக விளையாடி இருக்கிறார்கள். 24.1 ஓவர்களின் போது இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் 89 ரன்களும், சுப்மன் 64 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்திருந்தனர்.
இதன் பின் அடுத்த 5 ஓவர்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் இருவரும் ஒரு பவுண்டரியை கூட அடிக்கவில்லை. சதம் விளாசுவதற்காக இருவருமே சிங்கிள் சிங்கிளாக ரன்கள் சேர்க்க தொடங்கியுள்ளனர். சரியாக 30 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. அந்த 30 பந்துகளில் வெறும் 20 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
சதம் விளாசுவதற்காக இந்திய அணியின் இரு நட்சத்திர வீரர்களும் மிடில் ஓவர்களில் பவுண்டரிகளை விளாசாமல் ஒவ்வொரு ரன்களாக சேர்த்திருக்கிறார்கள். பலம் வாய்ந்த அணிக்கு எதிரான போட்டியில் அணியை முன்னிறுத்தாமல், சுயநலமாக சொந்த சாதனைகளுக்காக இரு வீரர்களும் விளையாடி இருப்பது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்த போதும் இப்படி சாதனைகளுக்காக பேட்டிங் செய்கிறார்களே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இதன் காரணமாக இளம் வீரர் ரிஷப் பண்ட் விரைந்து இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் ரிஷப் பண்ட் 99 ரன்களில் இருந்தாலும், அட்டாக்கில் இருந்து ஒருபோதும் பின் வாங்கியதாக வரலாறே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.