கராச்சி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கும் ஏழாம் பொருத்தம் என்பது உலகுக்கே தெரியும். இந்நிலையில், மீண்டும் ஒருமுறை கம்பீரை சீண்டியுள்ள அப்ரிடி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஆதரவாகப் பேசி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
இந்திய அணி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் சறுக்கலைச் சந்தித்தாலும், ஒருநாள் போட்டிகளில் ரோஹித் - கோலி கூட்டணியால் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இதைப் பற்றியே அப்ரிடி பேசியுள்ளார்.

டெலிகாம் ஏசியா ஸ்போர்ட் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அப்ரிடி, கவுதம் கம்பீரின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்தார். "கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில், 'தான் நினைப்பதும், சொல்வதும் தான் சரி' என்ற நினைப்பில் செயல்பட்டார். ஆனால், எல்லா நேரங்களிலும் நாம் நினைப்பது சரியாக இருக்காது என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று அப்ரிடி கூறியுள்ளார்.
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் (ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) கம்பீர் சாதித்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா சொந்த மண்ணில் 'ஒயிட்வாஷ்' ஆனது கம்பீரின் வியூகங்கள் மீதான நம்பிக்கையைக் குறைத்துள்ளது. இதைத்தான் அப்ரிடி சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பீரைத் தாக்கிய அதே சமயம், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை "இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பு" என்று அப்ரிடி வர்ணித்துள்ளார்.
"விராட் மற்றும் ரோஹித் இருவரும் இந்திய பேட்டிங் வரிசையின் ஆணிவேர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சமீபத்திய ஒருநாள் தொடரில் அவர்கள் ஆடிய விதத்தைப் பார்க்கும்போது, 2027 உலகக்கோப்பை வரை அவர்களால் நிச்சயம் விளையாட முடியும் என்று உறுதியாகச் சொல்லலாம்" என்று கோலி, ரோஹித்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
மேலும் பிசிசிஐக்கு ஒரு ஆலோசனையையும் அவர் வழங்கினார். "இந்த இரண்டு நட்சத்திரங்களையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும். பலவீனமான அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடும்போது, இவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இளம் வீரர்களைப் பயன்படுத்த வேண்டும். முக்கியமான தொடர்களுக்கு மட்டுமே இவர்களைப் பயன்படுத்த வேண்டும்" என்று அப்ரிடி கூறினார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் (351 சிக்ஸர்கள்) அடித்த தனது சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தது குறித்துப் பேசிய அப்ரிடி, "சாதனைகள் முறியடிக்கப்படவே உருவாக்கப்படுகின்றன. எனக்கு மிகவும் பிடித்த ஒரு வீரர் (ரோஹித்) என் சாதனையை முறியடித்ததில் மகிழ்ச்சியே.
ஐபிஎல் ஆரம்ப காலத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ரோஹித் வலைப்பயிற்சியில் ஆடுவதைப் பார்த்தபோதே, இவர் ஒருநாள் உலகத்தரம் வாய்ந்த வீரராக வருவார் என்று எனக்குத் தெரியும்" என்று ரோஹித் குறித்த பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் ஷாஹித் அப்ரிடி.