
ஐபிஎல்
கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தாண்டு ஐபிஎல் தொடர் மிகுந்த பாதுகாப்பு மத்தியில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் 9ம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. இதற்காக பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் அவர்களின் சர்வதேச போட்டிகளை விட்டுவிட்டு ஐபிஎல்-க்காக இந்தியா வருகின்றனர். அந்த வகையில் வங்கதேச வீரர் சகிப் அல் ஹசனும், இலங்கையுடனான டெஸ்ட் தொடரை விட்டுவிட்டு இந்தியா வருகிறார்.

டெஸ்ட் தொடர்
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணி அங்கு வரும் ஏப்ரல் 21ம் தேதி முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மீதமுள்ள போட்டிகளாகும். ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் தொடர் தொடங்குவதால், வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் தனக்கு ஐபிஎல் பங்கேற்க விருப்பம் உள்ளதாக கூறி அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதினார். ஆனால் அந்நாட்டு வாரியத்தால் சகிப்பிற்கு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட விருப்பமில்லை என்பது போல் தெரிவித்துள்ளது. இதனால் சகிப் அல் ஹசன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

சகிப் விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சகிப் அல் ஹசன், நான் எழுதிய கடிதத்தில் ஐபிஎல்-ல் விளையாட விருப்பம் உள்ளதாக தான் குறிப்பிட்டேன். ஒரு இடத்தில் கூட டெஸ்ட் போட்டியில் ஆட விருப்பமில்லை என கூறவில்லை. வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அக்ரம் தவறாக மாற்றி கூறுகிறார். இந்த 2 டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டிகள்தான் எனினும் இறுதிப்போட்டிக்கு எப்படியும் முன்னேற முடியாது. மேலும் புள்ளிப்பட்டியலிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. எனவே ஐபிஎல்-ஐ தேர்வு செய்தேன் என தெரிவித்தார்.

சகிப்பின் ப்ளான்
ஐபிஎல்-ல் நான் பங்கேற்பதற்கு முக்கிய காரணம் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயார் ஆவதற்காக தான். ஏனென்றால் ஐபிஎல்-ல் நான் விளையாடும் அதே மைதானங்களில்தான் உலகக்கோப்பையிலும் விளையாட போகிறேன். அதே வீரர்களுடன் தான் உலகக்கோப்பையில் ஆடப்போகிறேன். எனவே உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படவும், தயாராகவும் ஐபிஎல் உதவியாக இருக்கும் என சகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். இவர் ஐபிஎல்-ல் கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications