அகமதாபாத் : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை நான்கு முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
வெற்றியுடன் தொடரை தொடங்க இரண்டு அணிகளும் கடுமையாக மோதும் என்பதால் ஆட்டத்தில் பரப்பரப்பில் பஞ்சம் இருக்காது. இந்த நிலையில் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி சந்தித்தது. புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது. இதுவரை சென்னை அணி இரண்டு முறை தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் இருந்துள்ளது.

இதனால் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது. சிஎஸ்கே அணியில் தோனி தற்போது 41 வயதில் விளையாடி வருகிறார். அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் சிஎஸ்கே அணி கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவார்கள். எப்போதுமே அவர்கள் இப்படித்தான் கம்பேக் கொடுப்பார்கள்.
சிஎஸ்கே அணியில் தலைசிறந்த வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை தோனி மற்றும் ஸ்டீபன் பிளம்மிங் சிறப்பாக வழி நடத்துவார்கள். தொடர் எப்படி இருந்தாலும் அவர்களால் திருப்புமுனையை ஏற்படுத்த முடியும். அது பற்றி எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. சிஎஸ்கே அணி எப்படி செயல்படுவார்கள் என்று எனக்கு தெரியும். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடியும் தருவாயில் நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடினேன்.
அந்த மூன்று ஆண்டுகள் என் வாழ்நாளில் எவ்வளவு சிறந்ததாக இருந்தது என்று எனக்கு நன்றாக தெரியும்.சிஎஸ்கே ரசிகர்கள் எப்போதுமே எங்களுக்கு ஸ்பெஷல் ஆனவர்கள். தோனிக்கு இது கடைசி சீசன் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது. தோனி இன்னும் நன்றாக உடல் தகுதியுடன் இருக்கிறார்.
தொடர் தொடங்குவதற்கு முன்பு கடினமாக பயிற்சி செய்து வந்திருக்கிறார். இந்த தொடருக்காக நீண்ட காலமாக ஆயத்தமாக இருக்கிறார். தோனிக்கு ஒரு பெரிய விஷயத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
41 வயதிலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை நிச்சயம் அவர் நிரூபிப்பார். ஏனென்றால் அவரால் அது முடியும் என வாட்சன் கூறியுள்ளார்.