இந்திய கிரிக்கெட் அணியில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் முன் வரிசை வீரர்களை விட பின்வரிசை வீரர்கள் தான் பேட்டிங்கில் பங்களிப்பை அளித்து அணியை பலமுறை காப்பாற்றி இருக்கிறார்கள்.
நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையில் கூட இந்திய அணியின் டாப் வரிசை வீரர்களை விட ஜடேஜா அஸ்வின் அக்சர் பட்டேல் ஆகியோர்தான் அதிக ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி ஆட்டத்தில் கூட இந்திய அணி 152 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ரஹானே உடன் சர்துல் தாக்கூர் தான் ஜோடியாக சேர்ந்து அணியின் மானத்தை காப்பாற்றினார். 109 பந்துகளை எதிர்கொண்ட ஷர்துல் தாக்கூர் ஆறு பவுண்டரிகள் உடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதன் மூலம் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்தது.

ஏற்கனவே பலமுறை முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளையும் எடுத்து ரன்களும் குவித்து அணியை ஷர்துல் தாக்கூர் காப்பாற்றி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் இவரை லார்ட் தாக்கூர் என்று அழைப்பார்கள். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனை ஒன்றை சர்துல் தாக்கூர் சமன் செய்திருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடர்ந்து மூன்று முறை அரை சதம் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பிராட்மேன் படைத்திருந்தார். தற்போது அவருக்குப் பிறகு ஷர்துல் தாக்கூர் அந்த ரெக்கார்டுக்கு சொந்தக்காரராக உள்ளார். பிராட்மேன் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான் ரெக்கார்டை ஷர்துல் தாக்கூர் சமன் செய்திருப்பது அவருடைய பேட்டிங் தன்மையை காட்டுகிறது. இதனால் ரசிகர்கள் ஷர்துல் தாக்கூரைகொண்டாடி வருகின்றனர்.